செய்திகள்
ஷில்பா ஷெட்டி கணவர் ராஜ்குந்த்ரா

கணவர் ராஜ்குந்த்ராவின் தொழில்கள் பற்றி தனக்கு எதுவும் தெரியாது: ஷில்பா ஷெட்டி

Published On 2021-09-17 02:20 GMT   |   Update On 2021-09-17 02:20 GMT
ஆபாச பட வழக்கு தொடர்பாக ராஜ்குந்த்ரா உள்ளிட்டவர்களுக்கு எதிராக 1,467 பக்க குற்றப்பத்திரிகையை மும்பை மெட்ரோபாலிட்டன் கோர்ட்டில் போலீசார் தாக்கல் செய்தனர்.
மும்பை:

பெண்களை வைத்து ஆபாச படம் எடுத்து, அதை ஹாட்ஷாட்ஸ் என்ற செயலில் பதிவேற்றம் செய்து பணம் சம்பாதித்தது தொடர்பாக பிரபல நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ராவை கடந்த ஜூலை மாதம் 19-ந்தேதி மும்பை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரது நிறுவனத்தின் ஐ.டி. பிரிவு தலைவர் ரியான் தோர்பேயும் கைதானார்.

இந்தநிலையில் ஆபாச பட வழக்கு தொடர்பாக ராஜ்குந்த்ரா உள்ளிட்டவர்களுக்கு எதிராக 1,467 பக்க குற்றப்பத்திரிகையை மும்பை மெட்ரோபாலிட்டன் கோர்ட்டில் போலீசார் தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கில் ராஜ்குந்த்ரா, ரியான் தோர்பே தவிர தேடப்பட்டு வரும் யாஷ் தாக்குர் என்ற அரவிந்த் ஸ்ரீவட்சவா, ராஜ்குந்த்ராவின் மைத்துனர் பிரதீப் பாக்சி ஆகியோருக்கு எதிரான குற்றப்பத்திரிகை ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டுள்ளது. யாஷ் தாக்குர் சிங்கப்பூரிலும், பிரதீப் பாக்சி லண்டனிலும் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் போலீசார் கோர்ட்டில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், ராஜ்குந்த்ராவின் மனைவி நடிகை ஷில்பா ஷெட்டி உள்பட முக்கிய சாட்சிகள் அளித்த வாக்குமூலங்கள் இடம்பெற்றுள்ளன.

அதில், “ஆபாச படங்களை பதிவேற்ற பயன்படுத்தப்பட்ட ஹாட்ஷாட்ஸ் மற்றும் பாலிவுட் பேம் செயலிகள் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என ஷில்பா ஷெட்டி தெரிவித்துள்ளார்.

அதுமட்டும் இன்றி தனது வேலையில் மும்முரமாக இருந்ததால் ராஜ்குந்த்ரா செய்து வந்த தொழில்கள் குறித்து தனக்கு எதும் தெரிந்திருக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.

இது குறித்து மற்றொரு நடிகை ஷெர்லி சோப்ரா போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், “ராஜ்குந்த்ரா என்னிடம் எந்த தயக்கமும் இல்லாமல் ஹாட்ஷாட்ஸ் செயலியில் வேலை செய்யுமாறு கேட்டுக்கொண்டார். இந்த ஆப்பில் அதிக ஆபாசமான மற்றும் சூடாக்கக்கூடிய வகையிலான வீடியோக்களில் நடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. நான் அதை ஏற்க மறுத்துவிட்டேன்.

மேலும் “தி ஷெர்லின் சோப்ரா ஆப்' என்ற மொபைல் செயலியை உருவாக்க ஆர்ம்ஸ்ப்ரைம் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டேன். சவுரப் குஷ்வானா மற்றும் ராஜ்குந்த்ரா ஆகியோர் அந்த நிறுவனத்தின் இயக்குனர்கள் ஆவர்.

உடன்படிக்கையின்படி அதன் வருவாயில் 50 சதவீதத்தை எனக்கு தரவேண்டும். ஆனால் எனக்கான பங்கு ஒருபோதும் கிடைக்கவில்லை” என்றார்.

மற்றொரு சாட்சியான சேசாஜ் ஷா போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில், “2020-ம் ஆண்டு ஊரடங்கு காலத்தில் மட்டும் ஹாட்ஷாட்ஸ் பயன்பாட்டுக்காக 3 படங்கள் எடுக்கப்பட்டன.

அதுமட்டும் இன்றி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட யாஷ் தாக்‌கூர் ஒரு ரீமேக் படத்தில் என்னை நடிக்க வைத்தார். அதிக ஆபாச, ஆடை குறைப்பு காட்சிகள் உள்ள இந்த படம் இந்தியாவில் திரையிடப்படாது என எனக்கு உறுதி அளிக்கப்பட்டது. ஆனால் இந்த படம் இந்தியாவில் திரையிடப்பட்டது. எனவே படத்தில் உள்ள மோசமான காட்சிகளை நீக்க வலியுறுத்தியபோது யாஷ் தாக்‌கூர் மறுத்துவிட்டார்” என்றார்.
Tags:    

Similar News