செய்திகள்
கோப்புபடம்

பெண்ணாடம் அருகே சர்க்கரை ஆலை ஊழியர் வீட்டில் திருட்டு

Published On 2020-10-23 14:25 GMT   |   Update On 2020-10-23 14:25 GMT
பெண்ணாடம் அருகே பக்கத்து வீட்டை பூட்டிவிட்டு சர்க்கரை ஆலை ஊழியர் வீட்டில் மர்மநபர்கள் திருடிச்சென்றுள்ளனர்.
பெண்ணாடம்:

பெண்ணாடம் அருகே இறையூர் தனியார் சர்க்கரை ஆலை வளாகத்தில் உள்ள குடியிருப்பில் வசித்து வருபவர் கொளஞ்சிநாதன். சர்க்கரை ஆலை ஊழியரான இவர் வீட்டை பூட்டிவிட்டு தனது சொந்த ஊரான பெண்ணாடத்துக்கு சென்றார். இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு மர்மநபர்கள் கொளஞ்சிநாதனின் வீட்டு பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த ஒரு பவுன் நகை, வெள்ளி கொலுசு, ரூ.5 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடினர்.

பின்னர் அருகில் உள்ள கவியரசு என்பவரின் வீட்டுக்குள் புகுந்துள்ளனர்.

ஆனால் அங்கு பணம், நகை ஏதும் இல்லாததால், மர்மநபர்கள் அங்கிருந்து சென்றனர். முன்னதாக திருடுவதற்கு முன் மர்மநபர்கள் யாரிடமும் சிக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக முன்னெச்சரிக்கையாக கொளஞ்சிநாதன், கவியரசு ஆகியோரின் பக்கத்து வீட்டை சேர்ந்த சிக்கந்தர் சிங், பைசல் ராஜ் ஆகியோரின் வீட்டின் கதவை வெளிப்புறமாக பூட்டு போட்டு பூட்டியுள்ளனர்.

அதன் பின்னர் மர்மநபர்கள் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் நேற்று காலை சிக்கந்தர் சிங், பைசல் ராஜ் ஆகியோர் எழுந்து வந்து பார்த்தபோது, தங்களது வீட்டின் கதவு வெளிப்புறமாக பூட்டு போட்டு பூட்டப்பட்டிருந்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பூட்டுகள் உடைக்கப்பட்டு அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இது குறித்த தகவலின் பேரில் பெண்ணாடம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் இது குறித்து தனித்தனியாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News