செய்திகள்
பாதாள சாக்கடை குழாயில் அடைப்பு - கழிவுநீர் வழிந்து ஓடுவதால் பொதுமக்கள் அவதி
சிதம்பரத்தில் பாதாள சாக்கடை குழாயில் ஏற்பட்ட அடைப்பால் கழிவுநீர் வழிந்து ஓடுவதால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.
அண்ணாமலைநகர்:
சிதம்பரத்தில் பிரசித்திபெற்ற அனந்தீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் அருகில் உள்ள செல்வவிநாயகர் நகரில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர், பாதாள சாக்கடை குழாய் வழியாக செல்கிறது.
இந்த நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு அந்த பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த பாதாள சாக்கடை குழாயில் அடைப்பு ஏற்பட்டது. இதனால் பாதாள சாக்கடை மேன்கோலில் இருந்து கழிவுநீர் பொங்கி தெருவில் ஓடுகிறது. அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். மேலும் தொற்று நோய் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.
இது குறித்து அப்பகுதி மக்கள், சிதம்பரம் நகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து நகராட்சி அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து, கழிவுநீர் உறிஞ்சும் டேங்கர் லாரி மூலமாக கழிவுநீரை அகற்றினார்கள். ஆனால் பாதாள சாக்கடை குழாயில் ஏற்பட்ட அடைப்பை சரிசெய்யவில்லை.
இதனால் தொடர்ந்து அந்த பகுதியில் கழிவுநீர் பொங்கி, வழிந்து ஓடுகிறது. இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.