செய்திகள்
திருப்பூரில் வங்கி காவலாளி தற்கொலை சம்பவம் - கந்து வட்டி கேட்டு மிரட்டிய முதியவர் கைது
ஊத்துக்குளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கருப்புசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஊத்துக்குளி:
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே உள்ள பல்லகவுண்டன்பாளையம் ஆலங்காட்டு புதூர் பகுதியை சேர்ந்தவர் கருப்புசாமி (வயது 60). இவர் பல்லகவுண்டம்பாளையம் பகுதியில் செயல்படும் தனியார் வங்கியில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். இவர் சாமியார்பாளையம் செல்லும் வழியில் உள்ள வேப்பமரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதையடுத்து ஊத்துக்குளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கருப்புசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அப்போது அவரது சட்டை பையில் ஒரு கடிதம் இருந்தது. அந்த கடிதத்தில், கருப்புசாமி ஒரு வருடங்களுக்கு முன்பாக கூனம்பட்டி ஆலாம்பாளையம் பகுதியை சேர்ந்த கணேசன் (60) என்பவரிடம் ரூ. 35 ஆயிரம் கடனாக பெற்று இருந்ததாகவும், சில மாதங்களுக்கு முன்பாக ரூ. 24 ஆயிரத்தை திருப்பிக் கொடுத்து விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கணேசன் ரூ. 1 லட்சம் தர வேண்டும் என மிரட்டி வந்ததுடன், கருப்புசாமியின் சாதியின் பெயரை சொல்லி அவமானப்படுத்தி தகாத வார்த்தையில் திட்டியதன் காரணமாக மனமுடைந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்வதாக கருப்புசாமி கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து ஊத்துக்குளி போலீசார் கணேசனிடம் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் கணேசன், கருப்புசாமியிடம் கந்து வட்டி கேட்டு மிரட்டி வந்தது தெரியவந்தது. இதையடுத்து கருப்புசாமியை தற்கொலைக்கு தூண்டிய தாக கணேசன் மீது போலீ சார் வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர்.