செய்திகள்
சித்தராமையா

கர்நாடக அரசின் கஜானாவில் இருந்த பணம் எங்கே போனது?: சித்தராமையா கேள்வி

Published On 2020-11-03 01:56 GMT   |   Update On 2020-11-03 01:56 GMT
கர்நாடக அரசின் கஜானாவில் இருந்த பணம் எங்கே போனது? இதற்கு எடியூரப்பா பதிலளிக்க வேண்டும் என்று கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கேள்வி எழுப்பியுள்ளார்.
பெங்களூரு :

கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க பணம் இல்லை, கொரோனா பிரச்சினைக்கு தீர்வு காண பணம் இல்லை என்று அரசு சொல்கிறது. இதற்காக மாநில அரசு ரூ.90 ஆயிரம் கோடி கடன் பெற திட்டமிட்டுள்ளது. அப்படி என்றால் கர்நாடக அரசின் கஜானாவில் இருந்த பணம் எங்கே போனது?. இதற்கு எடியூரப்பா பதிலளிக்க வேண்டும். கர்நாடகத்தில் கடந்த 2019-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தால் 2 லட்சத்து 24 ஆயிரம் வீடுகள் இடிந்து விழுந்தன. மத்திய அரசு வழங்கியுள்ள புள்ளி விவரங்களின்படி இதுவரை 1 லட்சத்து 24 ஆயிரம் வீடுகளுக்கு மட்டுமே இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

மீதம் உள்ள வீடுகளுக்கு இந்த அரசு எப்போது இழப்பீடு வழங்கும்?. கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ள சேதங்களுக்கே அரசு இன்னும் நிவாரணம் வழங்கவில்லை. ஆனால் முதல்-மந்திரி எடியூரப்பா, மந்திரிகள் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக உள்ளனர். மாவட்ட பொறுப்பு மந்திரிகள் தங்களின் வீடுகளில் ஓய்வு எடுக்கிறார்கள். அதனால் மக்கள் தெருவுக்கு வந்துவிட்டனர். கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தால் ரூ.35 ஆயிரம் கோடிக்கு சேதம் ஏற்பட்டதாக மாநில அரசு கூறியது.

ஆனால் மத்திய அரசு ரூ.1,869 கோடி மட்டுமே வழங்கியுள்ளது. நடப்பு ஆண்டில் தற்போது ஏற்பட்ட வெள்ளத்திற்கு மாநில அரசு ரூ.4,000 கோடி மட்டுமே கேட்டுள்ளது. நமது உரிமையை கேட்பதற்கு கூட மாநில அரசு பயந்து கொள்கிறதா?. கடந்த 3 மாதத்தில் பெய்த கனமழையால் 23 மாவட்டங்களில் 130 தாலுகாக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 11 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் பயிர்கள் சேதம் அடைந்துள்ளன. இது கடந்த ஆண்டை விட அதிகம்.

இவ்வாறு சித்தராமையா தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News