செய்திகள்
அப்துல் அஸ்லாம்

சிறுகனூர் அருகே லாரி மோதி கல்லூரி மாணவர் பலி

Published On 2021-01-14 05:08 GMT   |   Update On 2021-01-14 05:08 GMT
சிறுகனூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
சமயபுரம்:

சமயபுரம் அருகே உள்ள இனாம்சமயபுரம் பகுதியை சேர்ந்தவர் சபியுல்லா. இவருடைய மகன் அப்துல் அஸ்லாம் (வயது 23). இவர், சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் எம்.பி.ஏ. இறுதியாண்டு படித்து வந்தார். இவருடைய பெற்றோர் வெளிநாட்டில் உள்ளதால், இனாம் சமயபுரத்தில் உள்ள தனது உறவினர் அப்துல் ஹக்கீம் பராமரிப்பில் அப்துல் அஸ்லாம் இருந்து வந்தார்.

இந்தநிலையில் கல்லூரியில் தேர்வு முடிந்ததால், நேற்று முன்தினம் முதல் விடுமுறை விடப்பட்டது. இதனால் சென்னையில் இருந்து இனாம்சமயபுரத்திற்கு தனது உடைமைகளை எடுத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் அப்துல் அஸ்லாம் வந்து கொண்டிருந்தார்.

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிறுகனூர் அருகே வந்த போது, திருச்சியிலிருந்து பெரம்பலூர் நோக்கி சென்ற லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அப்துல் அஸ்லாம் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்.

இதுபற்றி தகவலறிந்த சிறுகனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

பின்னர் அப்துல்அஸ்லாமின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரான பெரம்பலூரை சேர்ந்த செல்வராஜ் (44) என்பவரை கைது செய்தனர்.
Tags:    

Similar News