செய்திகள்
பருத்தி, நூல் ஏற்றுமதியை கட்டுப்படுத்த நடவடிக்கை - முதல்வரிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்
தமிழ்நாடு ஏற்றுமதி மேம்பாட்டுக் கொள்கை வெளியிடப்பட்டது ஏற்றுமதியாளர்களுக்கு மிகவும் சாதகமாக அமைந்துள்ளது.
திருப்பூர்:
திருப்பூரில் நடைபெற்ற அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதைத் தொடர்ந்து திருப்பூர் தொழில் துறையினருடன் கலந்துரையாடலில் பங்கேற்றார். இதில் தமிழக தொழில் துறைக்கு 100 பில்லியன் டாலர் ஏற்றுமதி வர்த்தக இலக்கு நிர்ணயித்து, அதற்கான திட்டங்களை வகுத்த முதல்வருக்கு தொழில் துறையினர் நன்றி தெரிவித்தனர் .
மேலும் தமிழ்நாடு ஏற்றுமதி மேம்பாட்டுக் கொள்கை வெளியிடப்பட்டது ஏற்றுமதியாளர்களுக்கு மிகவும் சாதகமாக அமைந்துள்ளது என்றனர். இதைத் தொடர்ந்து தொழில் துறையினர் முதல்வரிடம் விடுத்துள்ள கோரிக்கையில், தமிழகத்தில் இருந்து 50 சதவீத நூலும், 15 சதவீத பருத்தியும் உற்பத்தி செய்யப்படுகிறது. எனினும், நூல் விலை உயர்வு அனைவரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.
ஆகவே, பருத்தி மற்றும் நூலை கட்டுப்பாடுகளுடன் ஏற்றுமதி செய்ய நாடாளுமன்றத்தில் மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்றனர்.
இந்த கலந்துரையாடலில் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், திருப்பூர் மக்களவை உறுப்பினர் கே.சுப்பராயன், திருப்பூர் தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் க.செல்வராஜ், தொழில் துறை கூடுதல் தலைமை செயலாளர் எஸ்.கிருஷ்ணன், மாவட்ட கலெக்டர் வினீத், ஏஇபிசி. தலைவர் சக்திவேல், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.