கவர்னர் கிரண்பேடி நாட்டின் ஜனாதிபதி போல் செயல்படுகிறார்- நாராயணசாமி குற்றச்சாட்டு
புதுச்சேரி:
புதுவை கவர்னர் கிரண்பேடிக்கும், முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது.
இந்த நிலையில் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
அன்றாட அரசு பணிகளில் கவர்னர் தலையிடக் கூடாது என்று கோர்ட்டு உத்தரவிட்டும் அதை கவர்னர் கிரண்பேடி பின் பற்ற மறுக்கிறார்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருக்கும் நிலையில் அவர் தனியாக இணையான அரசு ஒன்றை நடத்திக்கொண்டு இருக்கிறார்.
சட்டங்களையும், விதி முறைகளையும் தொடர்ந்து அவர் மீறுகிறார். இந்திய அரசியல் சாசன சட்டப்படி கவர்னர் அமைச்சரவையின் ஆலோசனையின்படி செயல்பட வேண்டும்.
ஆனால், அவர் இதற்கு மதிப்பு அளிக்காமல் தனி ஆட்சியாளர் போல் செயல்படுகிறார். தேர்ந்து எடுக்கப்பட்ட அரசுக்கு எந்த மரியாதையும் அளிப்பது இல்லை.
புதுவையில் இது போன்று எந்த கவர்னரும் மோசமாக செயல்பட்டது இல்லை.
அவர் இந்த நாட்டின் ஜனாதிபதி போல் செயல்பட்டு கொண்டு இருக்கிறார். ஜனாதிபதி கூட அமைச்சரவையின் ஆலோசனையின்படிதான் செயல்படுகிறார்.
ஆனால், கிரண்பேடி இதையும் மீறுகிறார். அவர் ரப்பர் ஸ்டாம்பாக செயல்பட வேண்டும் என்று நாங்கள் நினைக்கவில்லை. விதிகள்படி நடந்து கொள்ள வேண்டும்.
சமீபத்தில் சர்தார் வல்லபாய் பட்டேல் ஓட்டம் நிகழ்ச்சி நடத்த அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், கவர்னர் தனியாக ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து நடத்துகிறார்.
நீர்நிலைகளை பராமரிக்கும் பணிகளுக்கு உதவியதாக கூறி அவர்களுக்கு இவரே தனியாக அரசு சார்பில் விருது வழங்குகிறார்.
இதுபோன்ற விருதுகளை வழங்க அவருக்கு எந்த அதிகாரமும் இல்லை. காரைக்காலில் நீர்நிலை பராமரிப்பு பணிகளை அமைச்சர் கமலக்கண்ணன் தொடங்கி செயல்படுத்தினார்.
ஆனால், அதில் சம்பந்தப்பட்டவர்களுக்கு கவர்னர் சான்றிதழ்களை தன்னிச்சையாக வழங்கி இருக்கிறார். இதன் மூலம் அவர் அரசின் அன்றாட அலுவல் பணிகளில் தலையிடுவது உறுதியாகிறது.
இவ்வாறு நாராயணசாமி கூறினார்.