செய்திகள்
கோப்புபடம்

சோழவந்தான் அருகே தண்ணீர் தொட்டியில் விழுந்து சிறுவன் பலி

Published On 2021-07-14 15:40 GMT   |   Update On 2021-07-14 15:40 GMT
சோழவந்தான் அருகே தண்ணீர் தொட்டியில் விழுந்து சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சோழவந்தான்:

சோழவந்தான் அருகே திருவேடகம் ஊராட்சிக்கு உட்பட்ட திருமால்நத்தம் கிராமத்தில் மதுரையைச் சேர்ந்த பால்பாண்டி (வயது 51) என்பவர் தேங்காய் பதப்படுத்தும் தொழில் நடத்தி வருகிறார்.

இவர் தனது வீடு அருகே வசித்து வரும் முருகேஸ்வரி என்பவரின் 8 வயது பேரன் அய்யாவுவை தனது தொழிற்சாலைக்கு அழைத்து வந்தார். அங்கு வேலை முடிந்து சுத்தப்படுத்தும் பணிகள் நடைபெற்றன.

இதனால் சிறுவன் அய்யாவு வெளியே விளையாடிக் கொண்டிருந்தான்.

திடீரென சிறுவனை காணவில்லை. இதனால் பால்பாண்டி மற்றும் அங்கு வேலை செய்து கொண்டிருந்தவர்கள் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர். அப்போது தொழிற்சாலையில் உள்ள தண்ணீர் தொட்டியில் சிறுவனின் காலணி மிதந்தது. தொட்டிக்குள்ளே பார்த்தபோது அதில் சிறுவன் நீரில் மூழ்கி கிடந்தான்.

உடனே அவனை மீட்டு சோழவந்தான் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது சிறுவன் அய்யாவு வழியிலேயே இறந்து விட்டது தெரிய வந்தது.

இந்த சம்பவம் குறித்து சோழவந்தான் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், தலைமைக் காவலர் செல்லப்பாண்டி ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News