வழிபாடு
கள்ளழகர்

கள்ளழகர் கோவில் தெப்ப திருவிழா 16-ந்தேதி நடக்கிறது

Published On 2022-02-14 04:37 GMT   |   Update On 2022-02-14 04:37 GMT
அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் மாசி மாதம் நடைபெறும் தெப்ப திருவிழாவும் ஒன்றாகும். நாளை கஜேந்திர மோட்சம் நடைபெறும்.
திருமாலிருஞ்சோலை, தென் திருப்பதி என்று அழைக்கப்படுவது மதுரையை அடுத்த அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலாகும். இந்த கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் மாசி மாதம் நடைபெறும் தெப்ப திருவிழாவும் ஒன்றாகும். இந்த விழாவானது இன்று தொடங்குகிறது. 15-ந்தேதி ( நாளை) மாலை 4.30 மணிக்கு மேல் 5.15 மணிக்குள் கஜேந்திர மோட்சம் நடைபெறும்.

திருவிழாவின் முக்கிய நிகழ்வான தெப்ப உற்சவம் 16-ந் தேதி (புதன்கிழமை) காலை 6.30 மணிக்கு மேல் 7 மணிக்குள் ஸ்ரீ தேவி, பூமிதேவி சமேத கள்ளழகர் என்ற சுந்தராஜ பெருமாள் பல்லக்கில் எழுந்தருளி சுவாமி மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் தெப்பத்திற்கு புறப்பாடாகி செல்கிறார்.

மேலும் அன்று மண்டூக தீர்த்தம் என்ற பொய்கைகரைப்பட்டி புஸ்கரணிக்கு செல்லும் வழி நெடுகிலும் நின்று சேவை சாதித்து தொடர்ந்து பொய்கைக்கரைப்பட்டி தெப்பம் போய் சேரும். அங்கு பகல் 11.15 மணிக்கு மேல் 12 மணிக்குள் தெப்பத்தின் கிழக்கு புறம் உள்ள மண்டபத்தில் சுவாமி எழுந்தருளும். அப்போது சுற்று வட்டாரத்தில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்து சாமி தரிசனம் செய்வார்கள்.

இதைதொடர்ந்து அன்று மாலையில் சுவாமி வந்த வழியாக சென்று கள்ளழகர் கோவிலுக்கு போய் இருப்பிடம் சேரும். இந்த வருடம் தெப்பம் தண்ணீர் நிரம்பி உள்ளதால் சுவாமி வலம் வரும் என பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்து எதிர்பார்த்துள்ளனர். இத்துடன் இந்த திருவிழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் அனிதா மற்றும் கண்காணிப்பாளர்கள், கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News