செய்திகள்
ராகுல் காந்தி

கொரோனா 2-வது அலைக்கு தவறான கொள்கைகளே காரணம் - மத்திய அரசு மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு

Published On 2021-04-10 19:01 GMT   |   Update On 2021-04-10 19:01 GMT
இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை வேகமெடுத்து வருகிறது. முதல் அலையின் வேகத்தைவிட இந்த முறை மிகுந்த வீரியமுடன் பரவுவதால் லட்சத்துக்கு மேற்பட்டோர் தினமும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
புதுடெல்லி:

நாட்டில் கொரோனாவின் 2-வது அலைக்கு மத்திய அரசின் தவறான கொள்கைகளே காரணம் எனவும், சிறந்த பரிந்துரைகளை ஏற்காமல் ஆணவத்துடன் செயல்படுவதாகவும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை வேகமெடுத்து வருகிறது. முதல் அலையின் வேகத்தைவிட இந்த முறை மிகுந்த வீரியமுடன் பரவுவதால் லட்சத்துக்கு மேற்பட்டோர் தினமும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.



இதை கட்டுப்படுத்த முடியாமல் சுகாதாரத்துறையினர் விழிபிதுங்கி உள்ளனர். சுழன்றடிக்கும் இந்த சுனாமியில் இருந்து மக்களை பாதுகாப்பதற்கான வழி தெரியாமல் மத்திய-மாநில அரசுகளும் கையை பிசைந்து வருகின்றன.

இந்த நிலையில் இந்த 2-வது அலைக்கு மத்திய அரசின் தோல்வியுற்ற தவறான கொள்கைகளே காரணம் என ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில் குறிப்பிட்டு இருப்பதாவது:-

மத்திய அரசின் தோல்வியடைந்த கொள்கைகள், கொரோனாவின் ஒரு பயங்கரமான 2-வது அலை ஏற்பட வழிவகுத்துள்ளன. இதனால் புலம்பெயர் தொழிலாளர்கள் மீண்டும் ஒருமுறை புலம்பெயர வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

தடுப்பூசி போடுவதை அதிகரிப்பதுடன், மக்களின் கைகளில் பணமும் கொடுக்க வேண்டும். சாதாரண மனிதர்ககளின் வாழ்வுக்கும், நாட்டின் பொருளாதாரத்துக்கும் இந்த இரண்டும் முக்கியமானது.

ஆனால் ஆணவம் மிகுந்த இந்த அரசிடம், சிறந்த பரிந்துரைகளை ஏற்பதில் அலர்ஜி காணப்படுகிறது.

இவ்வாறு ராகுல் காந்தி கூறியுள்ளார்.
Tags:    

Similar News