செய்திகள்
அல்பேனியா நிலநடுக்கம் - பலி எண்ணிக்கை 40 ஆக அதிகரிப்பு
அல்பேனியா நாட்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.
டர்ரெஸ்:
ஐரோப்பா கண்டத்தின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது அல்பேனியா. இதன் தலைநகர் டிரானாவில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் பூமிக்கடியில் 20 கிலோமீட்டர் ஆழத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவானது.
அல்பேனியா கடற்கரை பகுதிகளில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் மற்றும் வீடுகள் குலுங்கின. வீட்டின் சுவர்களில் பிளவுகள் ஏற்பட்டதால் மக்கள் அப்பகுதி மக்கள் அனைவரும் வீதிகளில் தஞ்சம் புகுந்தனர்.
டர்ரெஸ் எனும் நகரில் உணவகம் ஒன்று முற்றிலும் இடிந்து விழுந்து நொறுங்கியது. இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
வடக்கு பகுதியில் 30க்கு மேற்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் கடுமையான சேதம் அடைந்தன. நிலநடுக்கம் காரணமாக கட்டிட இடிபாடுகளில் சிக்கி 16 பேர் உயிரிழந்தனர்.300க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என முதல்கட்டமாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், அல்பேனியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.