செய்திகள்
பணிகள் விறுவிறு - விரைவில் பயன்பாட்டுக்கு வரும் திருப்பூர் பழைய பஸ் நிலையம்
தற்போது வணிக வளாகத்தின் தரை மற்றும் முதல் தளம் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள காமராஜ் ரோடு பழைய பஸ் நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நவீன பஸ் நிலையமாக மாற்றப்படுகிறது. இதில் ஏறத்தாழ ரூ.37 கோடி மதிப்பில் புது வளாகம் கட்ட திட்டமிடப்பட்டு கடந்த 2018-ல் ஒப்பந்தம் வெளியிட்டு 2019 ஜனவரி மாதம் பணி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
வளாகத்தில் 70 கடைகள் கொண்ட வணிக வளாகம், 45 பஸ்கள் நிற்கும் வகையில் பஸ் ரேக்குகள், கழிப்பிடம், பயணியர் காத்திருப்பு, பஸ் ஊழியர் ஓய்வு அறை, பேட்டரி வாகனங்கள் சார்ஜ் செய்யும் அமைப்பு, கண்காணிப்பு கேமரா, பஸ் புறப்பாடு குறித்த டிஜிட்டல் மற்றும் மைக் அறிவிப்பு வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இதில் அமைகிறது. இந்த வளாக கட்டுமான பணி துரிதகதியில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தற்போது வணிக வளாகத்தின் தரை மற்றும் முதல் தளம் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டுள்ளன. சுவர்கள் பட்டி அடித்தும், தரை தளம் டைல்ஸ் பதித்தல், வயரிங் பணிகள் நிறைவடைந்துள்ளன. பஸ் நிலையம் வெளி தளம் உள்ளிட்ட பணிகள் தற்போது நடைபெறுகிறது. இவ்வளாகம் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.