செய்திகள்
மின் இணைப்பு திட்ட ஆலோசனை கூட்டம் ரத்து-விவசாயிகள் ஏமாற்றம்
கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கூட்டம் நடக்குமென விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
திருப்பூர்:
இலவச வேளாண் மின்சார இணைப்பு வைத்துள்ள விவசாயிகளுக்கு சோலார் மின்மோட்டர் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. அதன்படி விவசாயிகளை அழைத்து இத்திட்டம் குறித்து ஆலோசனை நடத்த எரிசக்தி முகமை உத்தரவிட்டுள்ளது.
இதற்காக இலவச விவசாய மின் இணைப்புகளை சோலார் மின் இணைப்புகளாக மாற்றும் திட்டம் குறித்து கலந்துரையாடல் நடத்த திருப்பூர் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது.
கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கூட்டம் நடக்குமென விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. விவசாயிகள் சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் ஆர்வத்துடன் வந்து காத்திருந்தனர். நீண்ட நேரம் காத்திருந்த நிலையில் கூட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவித்ததால் விவசாயிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
இதுகுறித்து கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ஈஸ்வரன் கூறுகையில், கலெக்டர் அழைப்பு விடுத்திருந்ததால் கலந்துரையாடலுக்கு வந்திருந்தோம். கூட்டம் ரத்து என்பதை முன்கூட்டியே அறிவித்திருக்கலாம்.
கடைசி நேரத்தில் கூட்டம் ரத்து செய்யப்படுவதாக அதிகாரிகள் அறிவித்தனர். தொலைதூரத்தில் இருந்து வரும் விவசாயிகளை அலைக்கழிக்க கூடாது என்றார்.