செய்திகள்
திருச்சி விமான நிலையத்தில் ரூ.54 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்
திருச்சி விமான நிலையத்தில் ரூ.54 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனர். மற்றொருவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கே.கே.நகர்:
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து உள்நாடு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகள் அளிக்கப்பட்டு வருகிறது. வெளிநாடுகளில் இருந்து பயணிகள் அங்கிருந்து உடமைகளில் மறைத்து தங்கம் கடத்தி வருவது காலங் காலமாய் நடந்து வருகிறது.
இதனை தடுக்க விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். ஆனாலும் நூதன முறையில் பலர் தங்கம் கடத்தி வருகின்றனர். ஆனாலும் நவீன ஸ்கேன் எந்திரங்கள் மூலம் கடத்தல் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து விடுகிறார்கள்.
இந்த நிலையில் நேற்றிரவு துபாயில் இருந்து திருச்சிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்தது. அதிலிருந்து இறங்கிய பயணிகளிடம் திருச்சி விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை உதவி ஆணையர் பண்டாரம் தலைமையிலான அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது திருவாரூரைச் சேர்ந்த முகம்மது சுலைமான் என்பவர் தனது உடைமையில் 186 கிராம் எடை கொண்ட ஐந்து வளையல்கள் மற்றும் கைச்செயினை மறைத்து வைத்து கடத்தியது தெரியவந்தது.
அதேபோன்று அதே விமானத்தில் பயணித்த திருச்சியைச் சேர்ந்த பஷீர் அகமது என்பவர் கலர் மாற்றம் செய்யபட்ட 1,247 கிராம் எடை கொண்ட ரூ.46.85 லட்சம் மதிப்புள்ள இருபத்திரண்டு தங்க காசுகளை மறைத்து வைத்து கடத்தியது தெரியவந்தது. இதனையடுத்து பசீர் அகமதுவை கைது செய்தனர். பசீர் மற்றும் முகம்மது சுலைமான் ஆகியோரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தங்கம் கடத்தி வந்தவர்கள் குருவியாக செயல்பட்டு பணத்திற்காக இந்த செயலை செய்தார்களா? என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.