செய்திகள்
ஹத்ராஸ் வன்கொடுமையை கண்டித்து போராட்டம்

ஹத்ராஸ் மாவட்ட எல்லைகளுக்கு சீல்- போராட்டங்ளை ஒடுக்க ஒரு மாதத்திற்கு 144 தடை உத்தரவு

Published On 2020-10-02 06:06 GMT   |   Update On 2020-10-02 06:25 GMT
உத்தர பிரதேசத்தில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட பட்டியல் இன இளம்பெண் உடலை போலீசார் அவசரமாக தகனம் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
ஹத்ராஸ்:

உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட பட்டியல் இன இளம்பெண், டெல்லி ஆஸ்பத்திரியில் உயிரிழந்தார். 

இளம்பெண்ணின் உடல் போலீஸ் பாதுகாப்புடன் நள்ளிரவில் தகனம் செய்யப்பட்டது. குடும்பத்தினர் அனுமதியின்றி, அவர்கள் யாரும் பங்கேற்காத நிலையில் போலீசார் அவசரமாக உடலை தகனம் செய்ததாக சர்ச்சை எழுந்துள்ளது. ஆனால் உறவினர்களின் ஒப்புதல் பெற்றே தகனம் செய்ததாக காவல்துறை கூறி உள்ளது.

ஹத்ராஸ் இளம்பெண் கொலைக்கு நீதி கேட்டு போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இதனால் ஹத்ராஸ் மாவட்டத்தில் பதற்றம் நிலவுகிறது. போராட்டங்களை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக ஒரு மாதத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாவட்ட எல்லைகள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டன. உயிரிழந்த பெண்ணின் கிராமத்தை  நோக்கி செல்லும் அனைத்து சாலைகளும் மூடப்பட்டுள்ளன. 

இதற்கிடையே, ஹத்ராஸ் சம்பவம் தொடர்பாக தேசிய பெண்கள் ஆணையம் தானாக முன்வந்து வழக்காக எடுத்துக் கொண்டுள்ளது. இதுதொடர்பாக உத்தரபிரதேச போலீஸ் டி.ஜி.பி.க்கு தேசிய பெண்கள் ஆணையம் கடிதம் எழுதி உள்ளது. 

அதில், ‘அந்த இளம்பெண் உடலை குடும்பத்தினரை ஒதுக்கி வைத்து விட்டு, நள்ளிரவு நேரத்தில் எரிப்பதற்கு போலீசார் அவசரம் காட்டியது ஏன்? என்பதற்கு விளக்கம் அளிக்க வேண்டும். விரைவிலேயே இந்த பதிலை அனுப்புங்கள்’ என்று கூறியுள்ளது.
Tags:    

Similar News