செய்திகள்
விபத்து

ஜெயங்கொண்டம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி வியாபாரி பலி

Published On 2019-11-04 16:20 GMT   |   Update On 2019-11-04 16:20 GMT
ஜெயங்கொண்டம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி, காய்கறி வியாபாரி பலியானார். மேலும் அவரது மனைவி உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகில் உள்ள இலையூர் கண்டியங்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் சின்னத்தம்பி (வயது 55). காய்கறி வியாபாரியான இவர் நேற்று முன்தினம் நள்ளிரவு, இவரது மனைவி சரஸ்வதியுடன் காட்டுமன்னார்குடியில் இருந்து இலையூர் கண்டியங்கொல்லை கிராமத்தை நோக்கி வந்து கொண்டு இருந்தனர். ஜெயங்கொண்டம்- செந்துறை சாலையில் புதுக்குடி அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த மோட்டார் சைக்கிள், சின்னதம்பி ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த சின்னத்தம்பி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதில் சரஸ்வதி படுகாயம் அடைந்தார். மேலும் எதிரே மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்திய சோழமாதேவி கிராமத்தை சேர்ந்த மகேஷ் (40) என்பவரும் படுகாயம் அடைந்தார். படுகாயம் அடைந்த சரஸ்வதியையும், மகேஷையும் அப்பகுதியினர் மீட்டு சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து மகேஷை மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

இது குறித்து தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சின்னதம்பியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்மோகன் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News