செய்திகள்
கோப்பு படம்.

தாம்பரம் அருகே கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து 3 வயது குழந்தை பலி

Published On 2021-02-26 23:48 GMT   |   Update On 2021-02-26 23:48 GMT
கழிவுநீர் தொட்டிக்குள் தவறி விழுந்து 3 வயது குழந்தை பரிதாபமாக இறந்த சம்பவம், தாம்பரம் அருகே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
தாம்பரம்:

சென்னை தாம்பரம் அடுத்த முடிச்சூர், லட்சுமி நகர், 1-வது தெருவைச் சேர்ந்தவர் விஜயகாந்த். எலக்ட்டீசியன். இவருடைய மனைவி ஜெபசெல்வி. இவர்களுக்கு 3 வயதில் சாய்சரண் என்ற ஆண் குழந்தை இருந்தது.

விஜயகாந்த், வேலை நிமித்தமாக திருவண்ணாமலைக்கு சென்றுவிட்டார். வீட்டில் ஜெபசெல்வி, தனது குழந்தையுடன் தனியாக இருந்தார்.

நேற்று மதியம் ஜெபசெல்வி வீட்டில் வேலை செய்துகொண்டிருந்தார். அங்கு விளையாடிக்கொண்டிருந்த குழந்தை சாய்சரண், திடீரென மாயமானது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெபசெல்வி, பல இடங்களில் தேடியும் குழந்தையை காணாமல் கதறி அழுதார்.

சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் குழந்தையை தேடினர். அப்போது வீட்டின் அருகே உள்ள கழிவுநீர் தொட்டியில் குழந்தை சாய்சரண், விழுந்து கிடப்பது தெரிந்தது. உடனடியாக குழந்தையை மீட்டு அருகேயுள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு குழந்தையை பரிசோதித்து பார்த்த டாக்டர்கள், குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். வீட்டில் விளையாடிய குழந்தை சாய்சரண், கழிவுநீர் தொட்டிக்குள் தவறிவிழுந்து இறந்ததாக தெரிகிறது.

குழந்தையின் உடலை பார்த்து அதன் தாய் ஜெபசெல்வி கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. இதுபற்றி பீர்க்கன்காரணை போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News