ஆன்மிகம்
கோவில் தலைமை பூசாரி ராஜேந்திரன் குண்டம் இறங்கிய காட்சி.

பண்ணாரி அம்மன் கோவிலில் எளிமையாக நடந்த குண்டம் விழா

Published On 2021-03-31 05:07 GMT   |   Update On 2021-03-31 05:07 GMT
சத்தியமங்கலம் அருகே பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோவிலில் எளிமையான முறையில் நடந்த குண்டம் விழாவில் பூசாரிகள் மட்டு்ம் தீ மிதித்தனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு ஈரோடு, திருப்பூர், கோவை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கர்நாடகா, கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம்.

பண்ணாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடைபெறும் குண்டம் திருவிழா பிரசித்தி பெற்றதாகும். இத்திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு குண்டம் இறங்கி தீ மிதித்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். மேலும் விவசாயிகள் தங்கள் வளர்ப்பு மாடுகளை குண்டம் இறங்க வைத்து அம்மனை வழிபடுவார்கள். இதுதவிர விவசாய நிலங்களில் விளையும் பயிர்களையும் குண்டத்தில் இட்டு வழிபடுவார்கள். இதனால் விவசாயம் செழிக்கும் என்பது விவசாயிகளின் நம்பிக்கை.

குண்டம் திருவிழா பூச்சாட்டுதல் தொடங்கியதும் மழை பெய்யும். அதே போல் இந்த ஆண்டு திருவிழாவுக்காக பூச்சாட்டப்பட்டதும் பண்ணாரியில் மழை கொட்டியது.

கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு குண்டம் திருவிழா ரத்து செய்யப்பட்ட நிலையில் இந்த ஆண்டு குண்டம் திருவிழா கட்டுப்பாடுகளுடன் மிகவும் எளிமையாக நடைபெற்றது. இதன்படி கடந்த 15-ந் தேதி எளிமையான முறையில் கோவிலில் பூச்சாட்டுதல் நிகழ்வுடன் திருவிழா தொடங்கியது. இதைத்தொடர்ந்து சுற்றுவட்டார கிராமங்களில் நடைபெறும் அம்மன் திருவீதி உலாவும் இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டது.

இதையடுத்து நேற்று அதிகாலை முக்கிய நிகழ்வான குண்டம் திருவிழா நடைபெற்றது. முன்னதாக அதிகாலை 3.30 மணி அளவில் கோவிலில் இருந்து தாரை தப்பட்டை மற்றும் பீனாச்சி வாத்தியம் முழங்க பூசாரிகள் ஊர்வலமாக தெப்பக்குளத்துக்கு சென்று பூஜை செய்தனர். பின்னர் அங்கிருந்து படைக்கலத்துடன் மீண்டும் கோவிலுக்கு ஊர்வலமாக வந்தடைந்தனர்.

அதன் பின்னர் கோவில் முன்பு ஏற்கனவே தயார் செய்யப்பட்ட குண்டத்துக்கு தலைமை பூசாரி ராஜேந்திரன் தலைமையில் பூஜைகள் நடந்தன. அதைத்தொடர்ந்து குண்டத்தை சுற்றிலும் கற்பூரம் பற்ற வைக்கப்பட்டு தலைமை பூசாரி ராஜேந்திரன் பூ தூவி வணங்கி பக்தி பரவசத்துடன் குண்டம் இறங்கினார். தொடர்ந்து கோவில் பூசாரிகள் ஆறுமுகம், செந்தில்குமார் மற்றும் படைக்கல பூசாரிகள் என மொத்தம் 11 பேர் மட்டுமே குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.பக்தர்கள் யாரும் குண்டம் இறங்க அனுமதிக்கப்படவில்லை.

வழக்கமாக அதிகாலை 4 மணி அளவில் பக்தர்கள் குண்டம் இறங்கும் நிகழ்வு தொடங்கி மாலை 4 மணி வரை 12 மணி நேரம் நடைபெறும். இதில் சுமார் 1½ லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள். ஆனால் இந்த ஆண்டு 11 பூசாரிகள் மட்டும் தீ மிதித்ததால் 5 நிமிடத்தில் குண்டம் இறங்கும் நிகழ்வு நிறைவு பெற்றது.

இதையடுத்து பண்ணாரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகத்துடன், வீணை அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதன்பின்னர் பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்ய கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
Tags:    

Similar News