செய்திகள்
வானூர் அருகே மான் இறைச்சி கடத்திய 2 வாலிபர்கள் கைது
வானூர் அருகே மான் இறைச்சி கடத்தி வந்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
வானூர்:
விழுப்புரம் மாவட்டம் புதுச்சேரி -திண்டிவனம் நான்குவழி சாலையில் கிளியனூர் போலீசார் நேற்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் சந்தேகப்படும்படியாக 2 பேர் வந்தனர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினர்.
இதையடுத்து அவர்கள் வைத்திருந்த துணிப் பையை சோதனை செய்தபோது, அதில் மான் இறைச்சி மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரித்தனர்.
விசாரணையில் அவர்கள் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த அன்பு (வயது 30), நரிக்குறவர் சின்னமணி (34) என்பது தெரியவந்தது. இவர்கள் திருவண்ணாமலை பகுதியில் மான்களை வேட்டையாடி அதன் இறைச்சியை விற்பனைக்காக கடத்தி வந்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட 2 பேரும் திண்டிவனம் வனச்சரக அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் மான் இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது.