ஆன்மிகம்
கிரிவலப்பாதையில் செங்கம் சாலை பிரியும் பகுதியில் போலீசார் மூலம் தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளதை காணலாம்.

பவுர்ணமி கிரிவலத்திற்கு தடையால் பக்தர்களின்றி வெறிச்சோடிய கிரிவலப்பாதை

Published On 2021-09-21 04:01 GMT   |   Update On 2021-09-21 04:01 GMT
திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலத்திற்கு தடை விதிக்கப்பட்டதால் பக்தர்களின்றி கிரிவலப்பாதை வெறிச்சோடி காணப்பட்டது. கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்த வெளியூர் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
திருவண்ணாமலையில் மலையை சிவனாக வழிபடுவதால் பவுர்ணமி நாட்களில் அருணாசலேஸ்வரர் கோவிலின் பின்புறம் உள்ள மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் மலை சுற்றும் பாதையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலத்திற்கு மாவட்ட நிர்வாகம் மூலம் தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு வருகிறது.

இந்த மாதத்திற்கான பவுர்ணமி நேற்று அதிகாலை 5.20 மணிக்கு தொடங்கி இன்று அதிகாலை 5.51 மணிக்கு நிறைவடைந்தது. இந்த மாதமும் பவுர்ணமி கிரிவலத்திற்கு தடை விதிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை என 3 நாட்கள் அருணாசலேஸ்வரர் கோவில் மற்றும் கிரிவலப்பாதையில் உள்ள அஷ்டலிங்க கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டு இருந்த நிலையில் 4-வது நாளாக நேற்றும் அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்களுக்கு சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட வில்லை.

இதை அறியாத வெளி மாநில பக்தர்கள் புரட்டாசி பவுர்ணமியன்று சாமி தரிசனம் செய்ய திருவண்ணாமலைக்கு நேற்று முன்தினம் இரவே வருகை புரிந்தனர். இதில் சிலர் நேற்று முன்தினம் இரவு முதலே கிரிவலம் செல்ல தொடங்கினர். நேற்று அதிகாலையில் பவுர்ணமி நேரத்தில் கிரிவலம் செல்ல வந்த பக்தர்கள் கிரிவலப்பாதையில் உள்ள அஷ்டலிங்க சன்னதிகள் மூடப்பட்டிருந்ததால் ஏமாற்றம் அடைந்தனர்.

மேலும் அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய முடியாததால் பக்தர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். பக்தர்கள் ராஜகோபுரம் முன்பு கற்பூரம் ஏற்றி வழிபட்டு சென்றனர். மேலும் நேற்று அதிகாலை முதல் கிரிவலப்பாதையில் உள்ள முக்கிய சாலை சந்திப்பு பகுதிகளில் போலீசார் மூலம் தடுப்புகள் அமைக்கப்பட்டு பக்தர்கள் கிரிவலம் செல்லாமல் தடுக்க கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது கிரிவலம் செல்ல வந்த பக்தர்களை போலீசார் திருப்பி அனுப்பினர். இருப்பினும் சிலர் மாற்றுத் பாதையில் கிரிவலப்பாதைக்கு வந்து தங்களது கிரிவலத்தை தொடர்ந்தனர்.

நேற்று பகலிலும், இரவிலும் தனித்தனியாக சிலர் கிரிவலம் சென்றனர். பக்தர்கள் கூட்டமின்றி கிரிவலப்பாதை வெறிச்சோடி காணப்பட்டது. போலீசார் தொடர்ந்து கிரிவலப்பாதையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
Tags:    

Similar News