பொது மருத்துவம்
நினைவாற்றலை அதிகரிக்க இதை எல்லாம் செய்யுங்க..

நினைவாற்றலை அதிகரிக்க இதை எல்லாம் செய்யுங்க..

Published On 2022-02-10 06:33 GMT   |   Update On 2022-02-10 06:33 GMT
இன்றைய இயந்திரமயமான வாழ்க்கை சூழலில் எதிர்கொள்ளும் நெருக்கடிகளால் நிறைய பேர் சாதாரண விஷயங்களை கூட எளிதில் மறந்துவிடுகிறார்கள்.
முதுமை பருவத்தை எட்டும்போது (அல்சைமர்) ஞாபக மறதி பிரச்சினை தலைதூக்கும். ஆனால் இன்றைய இயந்திரமயமான வாழ்க்கை சூழலில் எதிர்கொள்ளும் நெருக்கடிகளால் நிறைய பேர் சாதாரண விஷயங்களை கூட எளிதில் மறந்துவிடுகிறார்கள். பணி நெருக்கடி, அவசர கதியில் செயல்படுவது, அமைதியின்மை போன்றவை மறதிக்கு அடிகோலுகின்றன. குழந்தைகள் கூட கற்றுக்கொண்ட பாடத்தை எளிதில் மறந்துவிடலாம். நினைவகத்தை வடிவமைப்பதில் ஊட்டச்சத்துக்கள் முக்கிய பங்கு வகிப்பதை பல்வேறு ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன.

நமது மூளை பாலி அன்சாச்சுரேட்டட் என்னும் கொழுப்பால் ஆனது. மற்றும் அதிக வளர்சிதை மாற்ற செயல்பாட்டை கொண்டது. லூடீன் என்றழைக்கப்படும் ஒருவகை கலவை, மூளையின் நரம்புகளுக்கு பாதுகாப்பு வழங்குகிறது. நமது மூளை ஓய்வில் இருக்கும்போது 10 சதவீதம் ஆக்சிஜனையும், மன ரீதியாக செயல்படும்போது 50 சதவீதம் ஆக்சிஜனையும் பயன்படுத்துகிறது. இது உடல் எடையில் 2 சதவீதம் மட்டுமே என்றாலும், மூளை செயல்பட நிறைய ஆற்றல் தேவைப்படுகிறது. அதனை பெறுவதற்கு கவலைப்பட வேண்டியதில்லை. ஏனெனில் மூளையில் ஆக்ஸிஜனேற்ற எதிர் வினைகளை மாற்றியமைக்க உதவும் பல உணவுகள் உள்ளன. அவை நினைவாற்றல் இழப்பை கையாள்வதற்கும் பயனுள்ளதாக அமையும்.

வாரத்தில் 3 முதல் 4 நாட்கள் பின்பற்றும் ‘புரூட் பாஸ்ட்’ என்னும் விரதம் நினைவக செயல்பாட்டை மேம்படுத்தக்கூடியது. இந்த விரதத்தின்போது எந்த பழங்களை வேண்டுமானாலும் சாப்பிடலாம். ஆனால் மூன்று, நான்கு நாட்களும் மறக் காமல் தொடர்ச்சியாக பழங்களை சாப்பிட வேண்டும். அதேபோல் தூங்க செல்வதற்கு முன்பு ஒரு கப் சூடான நீரில் அரை டீஸ்பூன் திரிபலா பவுடரை கலந்து பருக வேண்டும். நினைவாற்றலை மேம்படுத்துவதற்கு மற்றொரு விரைவான வழிமுறையாக கிச்சாரி விரதம் அமைந்திருக்கிறது. மாதத்திற்கு ஒரு முறை 5 நாட்கள் காலை உணவாக பழங்கள் மட்டுமே உண்ண வேண்டும். திரவ உணவாக தண்ணீர் அல்லது மூலிகை டீ மட்டுமே பருக வேண்டும். மதிய உணவு மற்றும் இரவு உணவுக்கும் அதனையே பின்பற்ற வேண்டும்.

உருளைக்கிழங்கு, பச்சை இலை காய்கறிகள், கேரட், பாதாம், அக்ரூட் பருப்புகள், நெய், பால் போன்ற உணவுகள் அறிவாற்றல் செயல்பாட்டை அதிகரிக்கச் செய்யும். திராட்சை சாறும் பருகலாம். இது நினைவாற்றல் செயல்பாட்டை மேம் படுத்துவதோடு அறிவாற்றல் குறைபாட்டையும் தடுக்கக்கூடியது. ஆயுர்வேதத்தில் சில மூலிகைகள், நினைவகத்தை மேம்படுத்துவதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகின்றன. கேரட் ஜூஸை தினமும் உட்கொள்வதன் மூலமும் நினைவாற்றலை மேம்படுத்தலாம். இதில் நினைவாற்றலுக்கு உதவும் கரோட்டினாய்டுகள் இருக்கிறது. வெறுமனே கேரட் ஜூஸ் பருகாமல், அதனுடன் ஒரு துண்டு பீட்ரூட், ஒரு டீஸ்பூன் ஆளி விதை, சில துளிகள் ஆலிவ் ஆயில் சேர்த்துக்கொள்வது சிறப்பானது. அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்த இந்த சாற்றை பருகி வரலாம்.

மூளையில் நிணநீர் அமைப்பு ஒன்று உள்ளது. இது நச்சுக்களை நீக்கும் பணியை செய்கிறது. குறிப்பாக தூங்கும்போது மூளையில் இருக்கும் நச்சு, கழிவு பொருட்கள் வெளியேற்றப்படும். அதேபோல் நரம்பு மண்டலத்திலிருந்தும் கழிவுப் பொருட்கள் வெளியேறும். இந்த பணியை மேற்கொள்வதற்காகவே செரிப்ரோஸ்பைனல் எனும் திரவம் செயல்படுகிறது. இது நச்சு பொருட்கள் மட்டுமின்றி உடலில் இருந்து அனைத்து வகையான ரசாயன பொருட்களையும் வெளியேற்ற உதவுகிறது. நல்ல நினைவாற்றலை பெறுவதற்கு இரவில் 7 முதல் 8 மணி நேரம் நன்றாக தூங்குவது முக்கியமானது.

வாரத்திற்கு குறைந்தது ஐந்து முறையாவது உடற்பயிற்சியோ, நடைப்பயிற்சியோ மேற்கொள்வது நல்லது. தினமும் நடைப்பயிற்சி செய்வது அதைவிட சிறப்பானது. குறிப்பாக விறுவிறுப்பான நடை, ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும், நினைவகத்தை வலுப்படுத்தும். ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச்செய்யும் யோகாசனங்களை மேற்கொள்ளலாம். ஏனெனில் அவை ரத்த ஓட்டத்தை அதிகரித்து, நினைவுத்திறனை மேம்படுத்த வழிவகை செய்யும்.
Tags:    

Similar News