செய்திகள்
விபத்து

திசையன்விளை அருகே வெவ்வேறு விபத்துகளில் 6 பேர் படுகாயம்

Published On 2019-11-05 14:05 GMT   |   Update On 2019-11-05 14:05 GMT
திசையன்விளை அருகே வெவ்வேறு விபத்துகளில் பெண்கள் உள்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவங்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திசையன்விளை:

திசையன்விளை அருகே உள்ள உவரியில் இருந்து மீன்களை ஏற்றிக் கொண்டு நேற்று மாலை மினி லாரி ஒன்று கன்னியாகுமரி நோக்கி சென்று கொண்டிருந்தது. காரிகோவில் சோதனை சாவடி அருகே சென்றபோது அந்த வழியாக கன்னியாகுமரியில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி வந்த சுற்றுலா பயணிகளின் காரும், மினிலாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் காரில் பயணம் செய்த 3 பெண்கள் மற்றும் கார் டிரைவர் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். 

அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மினி லாரியில் பயணம் செய்தவர்கள் சிறிய காயத்துடன் தப்பினர். இந்த விபத்தில் மினிலாரி தலைகுப்புற கவிழ்ந்தது. இதனால் மீன்கள் சாலையில் சிதறி கிடந்தது. கார் அப்பளம் போல் நொறுங்கியது. இச்சம்பவம் குறித்து உவரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திசையன்விளை அருகேயுள்ள குமாரபுரத்தை சேர்ந்த சுந்தரபாண்டி மகன் இசக்கிதாஸ் (18). இவர் கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். அதே ஊரை சேர்ந்த ராமர் மகன் மகராஜன்(24). இந்த 2 பேரும் நேற்று மாலையில் குமாரபுரம் சாலை ஓரம் நின்று கொண்டிருந்தனர். 

அப்போது படுக்கப்பத்தில் இருந்து திசையன்விளை வழியாக சென்னை செல்லும் ஆம்னி பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த வழியாக மொபட்டில் வந்த ஒருவர் திடீரென சாலையின் குறுக்கே கடக்க முயற்சித்தார். மொபட் மீது மோதாமல் இருக்க டிரைவர் ஆம்னி பஸ்சை சாலையோரத்தில் திருப்பியுள்ளார். அப்போது சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த இசக்கிதாஸ், மகராஜன் ஆகியோர் மீது மோதிவிட்டு, அருகில் இருந்த பள்ளத்தில் பஸ்கவிழ்ந்து நின்றது. அந்த 2 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் பாளை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். 

அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து திசையன்விளை போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆம்னி பஸ் டிரைவர் முருகனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News