ஆன்மிகம்
ஜனகருக்கு அஷ்டவக்கிரர் உபதேசித்த கீதை

ஜனகருக்கு அஷ்டவக்கிரர் உபதேசித்த கீதை

Published On 2020-12-18 06:14 GMT   |   Update On 2020-12-18 06:14 GMT
ஜனகருக்கு அஷ்டவக்கிரர் சொன்ன உபதேசம் ‘அஷ்டவக்கிர கீதை’ என்ற பெயருடன் விளங்குகிறது. அந்த உபதேசத்தை பெற்ற ஜனகர் அன்று முதல் மகா ஞானியாகி விட்டார்.
சீதையின் தந்தையான ஜனகர் மகாராஜாவுக்கு, அன்று இரவு ஒரு கனவு வந்தது. அந்தக் கனவில் அவர் ஒரு பிச்சைக்காரராக இருந்தார். மேலும் பிச்சைக்காரராக, படக்கூடாத துன்பத்தை எல்லாம் அவர் அனுபவித்தார். நடப்பது கனவு போலவே தெரியவில்லை. நிஜத்தில் நடைபெறுவது போலவே இருந்தது. அதனால் திடுக்கிட்டு எழுந்தார், ஜனகர்.

கண்விழித்து பார்த்தபோது, எல்லாம் மாறியிருந்தது. அவர் மன்னராகவே இருந்தார். ஆனால் அந்தக் கனவு மறுநாள், அதற்கு அடுத்த நாள் என்று தொடர்ந்து கொண்டே இருந்தது. இரவுகளில் ஜனகர் பிச்சைக்காரராகவும், பகலில் மன்னனாகவும் இருந்தார். இதனால் அவருக்கு எது நிஜம், எது கனவு என்பதே தெரியவில்லை. மனக்குழப்பத்தில் ஆழ்ந்து போனார்.

“நான் மன்னனாக இருந்து பிச்சைக்காரனாக இருப்பது போல் கனவு கண்டேனா? அல்லது பிச்சைகாரனாக இருந்து இப்போது மன்னராக இருப்பது போல் கனவு காண்கிறேனா?” என சந்தேகம் வந்து விட்டது.

மந்திரி, ராஜகுரு எனப் பலரிடமும் தன்னுடைய சந்தேகத்தைக் கேட்டார், ஜனகர். யாருக்கும் பதில் தெரியவில்லை. அந்த சந்தேகம், அவர் மனதை அரித்துக் கொண்டே இருந்தது.

‘நான் பிச்சைக்காரனா? மன்னனா?’ என்று தன்னைத்தானே கேள்வி கேட்டுக் கொண்டே இருந்தார். தனது சந்தேகத்தைத் தீர்த்து வைப்பவர்களுக்கு பெரும் பரிசை அளிப்பதாக அறிப்பு வெளியிட்டார்.

நாட்டில் இருந்த அறிஞர்கள், தூர தேசத்திலிருந்து பண்டிதர்கள், முனிவர்கள், வேத விற்பன்னர்கள் எல்லாரும் வந்தனர். யாராலும் பதில் சொல்ல முடியவில்லை.

வெளியூரிலிருந்து விதேக நாட்டுக்கு ஒரு முனிவர் வந்தார்.

அவர் பெயர் அஷ்டவக்கிர மகரிஷி. அவர் உடல் 8 கோணலாக வளைந்திருக்கும். அது ஏனென்றால், அவர் தம் அன்னையின் வயிற்றிலிருந்த போது கத்துக்குட்டியான அவர் தகப்பனார் வேதத்தை தப்புத் தப்பாக படிப்பாராம். அப்போது வயிற்றிலிருந்த மகா ஞானியான குழந்தை, அதைக் கேட்கச் சகிக்காமல் உடம்பை திருப்பும். அப்படி 8 தடவை திருப்பி உடல் அஷ்ட கோணலாக வளைந்து ‘அஷ்ட வக்கிரன்’ என்ற பெயர் ஏற்பட்டது.

ஜனகரின் கேள்வியை அறிந்த அஷ்டவக்கிர மகரிஷி, அவரது அவைக்குச் சென்றார். பண்டிதர்களின் பெருங்கூட்டம் அவையில் இருந்தது. யாருக்கும் பதில் தெரியவில்லை

“என் கேள்விக்கு பதில் சொல்ல ஆளே இல்லையா?” என்று வேதனையோடு கேட்டார், ஜனகர்.

“நான் சொல்கிறேன்” என்றார் அஷ்டவக்கிரர்.

குரல் வந்த திசையைப் பார்த்து அவையில் இருந்த அனைவரும் திரும்பினர். பின்னர் அங்கே அஷ்டகோணலாக நிற்பவரைக் கண்டு, அவையில் இருந்த பண்டிதர்கள், அறிஞர்கள் உள்ளிட்ட அனைவரும் சிரித்தனர். அவர்களின் சிரிப்பொலி அடங்கும் வரை, அஷ்டவக்கிரர் பொறுமை காத்தார்.

பின்னர் ஜனக மகாராஜாவைப் பார்த்து, “மன்னா.. உங்களின் கேள்விக்கு நான் பதில் அளிக்கிறேன். ஆனால் அதற்கு முன்பாக, இந்த அவையில் இருக்கும் தோல் வியாபாரிகளையும், கசாப்புக் கடைக்காரர்களையும் வெளியே அனுப்புங்கள்” என்றார்.

“என்ன சொல்கிறீர்கள்? இது பண்டிதர்கள் நிறைந்த சபை. இங்கு எந்த கசாப்புக் கடைக்காரரும், தோல் வியாபாரியும் இல்லை” என்றார் ஜனகர்.

அதற்கு பதிலளித்த அஷ்ட வக்கிரர், “இங்கு பண்டிதன் என யாரும் இல்லை. இங்கிருப்போர் அனைவரும் கசாப்புக் கடைக்காரர்களும், தோல் வியாபாரிகளும் தான்” என்றார்.

சபை முழுக்க கொதித்தெழுந்தது. “வேதம் கற்ற பண்டிதர்களை இழிவுபடுத்திய இவனை கழுவிலேற்றுங்கள்” என்று கூச்சலிட்டனர்.

“ஏன் அப்படி சொன்னீர்கள்?” என்று பரிவுடன் கேட்டார், ஜனகர்.

“மன்னா! உன் கேள்விக்கு பதில் நான் சொல்கிறேன் என்று சொன்னேன். அப்போது சபை முழுக்க என்னைப் பார்த்துச் சிரித்தது. ஏன் சிரித்தார்கள்? என் குறைவான ஞானத்தைக் கண்டு சிரித்தார்களா? இல்லை, நான் தவறாகச் சொன்ன விளக்கத்தைக் கண்டு சிரித்தார்களா? இவை இரண்டுமே இல்லை. என் உருவத்தைப் பார்த்து சிரித்தார்கள். என் தோலின் நிறத்தை வைத்து, என் உடலின் உருவத்தை வைத்து இவர்கள் என்னை, என் அறிவை மதிப்பிட்டார்கள். என் தோலை வைத்து என் மதிப்பை நிர்ணயிக்கும் இவர்கள் தோல் வியாபாரிகள் தானே?

தோல் வியாபாரி தான் தோலின் நிறத்தை வைத்து, ஆட்டுத் தோலுக்கு விலை போடுவான். கசாப்புக் கடைக்காரன் தான், ஆட்டின் உருவத்தை வைத்து ஆட்டுக்கு மதிப்பு போடுவான். இவர்களும் என்னை அப்படித்தான் மதிப்பிட்டார்கள். அதனால் தான் இவர்களை தோல் வியாபாரி என்றேன். பண்டிதர்கள் இருக்க வேண்டிய சபையில் தோல் வியாபாரிகளுக்கு என்ன வேலை? அதனால் தான் இவர்களை வெளியே போகச் சொன்னேன்” என்றார் அஷ்டவக்கிரர்.

அவமானமடைந்த பண்டிதர்கள் தலைகுனிந்து சபையை விட்டு வெளியேறினார்கள்.

வந்தவர் மகா ஞானி என ஜனகர் அறிந்துகொண்டார். பணிவுடன் அவர் காலடியில் அமர்ந்து தன் சந்தேகத்துக்கு விடை கேட்டுத் தெரிந்து கொண்டார்.

ஜனகருக்கு அஷ்டவக்கிரர் சொன்ன அந்த உபதேசம் ‘அஷ்டவக்கிர கீதை’ என்ற பெயருடன் விளங்குகிறது.

அந்த உபதேசத்தை பெற்ற ஜனகர் அன்று முதல் மகா ஞானியாகி விட்டார்.

ஜனகரின் சந்தேகம் தீர்த்த மகரிஷியின் விளக்கம் இதுதான். “தூங்கிய போது கண்டதும் கனவு தான். இப்போ நீ வாழும் வாழ்வும் கனவுதான். உன்னோட ராஜ வாழ்வும், பிச்சைக்கார வாழ்வும் இரண்டுமே உண்மையில்லை. ராஜாவா இருக்கும்போது சந்தோஷப்படாதே. தூங்கும்போது அந்த சந்தோஷம் போயிடும். பிச்சைக்காரனா இருக்கும்போது வருத்தப்படாதே. விழித்ததும் அந்த வருத்தம் மறைந்து விடும். இரண்டு நிலையிலும் ஒரே மாதிரி இருக்கக் கற்றுக்கொள்” என்றார்.
Tags:    

Similar News