உள்ளூர் செய்திகள்
தேவாலயம் அடிக்கல் நாட்ட கிராம மக்கள் எதிர்ப்பு
சீர்காழியில் தேவாலயம் அடிக்கல் நாட்ட கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி புறவழிச்சாலையில் அமைந்துள்ள பணமங்கலம் கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
அக்கிராமத்தில் திருச்சபை ஒன்றுக்கு சொந்தமான இடத்தில் தேவாலயம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டதாக கூறப்படுகிறது.
கிறிஸ்தவர்களே இல்லாத கிராமத்தில் தேவாலயம் அமைக்கப்பட்டு வருவது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனையடுத்து முன்னறிவிப்பின்றி தேவாலயம் அமைக்கும் பணியை தொடங்குவதாக கூறியும், பணியை உடனே நிறுத்த வலியுறுத்தியும் எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பி பணமங்கலம் கிராம மக்கள், இந்து முன்னணி மற்றும் பா.ஜனதாவினர், ஊர்வலமாக நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வந்தனர்.
அங்கு முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.
துணை போலீஸ் சூப்பிரண்டு லாமெக் கிராமமக்கள், இந்து அமைப்பினரிடம், தனியார் இடத்தில் நடைபெறும் தேவாலய பணியை தடுக்கவோ, போராட்டம் நடத்தவோ, அனுமதி இல்லை என்றும் சட்ட ரீதியாக தீர்வு காணவும் அறிவுறுத்தினார்.
அதனை ஏற்று கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.