இந்தியா
திருப்பதி கோவில்

உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்பினால் குற்றவியல் நடவடிக்கை- திருப்பதி தேவஸ்தானம் எச்சரிக்கை

Published On 2021-12-06 06:31 GMT   |   Update On 2021-12-06 06:31 GMT
திருப்பதி தேவஸ்தானத்தின் பல்வேறு பணிகளுக்கு ஆட்கள் தேர்வு நடைபெற உள்ளதாக உண்மைக்கு புறம்பாக துண்டு பிரசுரங்களை சமூக வலைதளங்களில் சிலர் பரப்பி வருகின்றனர்.
திருப்பதி:

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வேலைக்கு ஆட்கள் தேர்வு நடப்பதாகவும், எவ்வளவு வேலை காலியாக உள்ளது. வேலைக்கு ஏற்ற சம்பளம் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய துண்டு பிரசுரம் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டு இருந்தது. இது போலியானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தேவஸ்தானம் வெளியிடுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திருப்பதி தேவஸ்தானத்தின் பல்வேறு பணிகளுக்கு ஆட்கள் தேர்வு நடைபெற உள்ளதாக உண்மைக்கு புறம்பாக துண்டு பிரசுரங்களை சமூக வலைதளங்களில் சிலர் பரப்பி வருகின்றனர்.

இதனை நம்பி யாரும் ஏமாற வேண்டாம். கடந்த காலங்களில் தேவஸ்தானத்தில் வேலை வாங்கித் தருவதாக சிலர் மோசடி செய்து பணம் வசூலித்த சம்பவங்கள் நடந்துள்ளன. அந்த நபர்கள் மீது கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தேவஸ்தானத்தில் காலி பணியிடத்திற்கு ஆட்கள் தேர்வு செய்ய இருந்தால், அதற்கு முன்பாகவே பத்திரிகை மற்றும் தேவஸ்தான இணையதளத்தில் அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியிடப்படும்.

கடந்த காலங்களில் தேவஸ்தானம் சார்பில் இதுபோன்ற வி‌ஷயத்தில் பொதுமக்களுக்கு தெளிவான விளக்கத்தை அளித்துள்ளது. எனவே பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.

பொய் பிரசாரம் செய்பவர்கள் மீது சட்டப்படி குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

திருப்பதியில் நேற்று 28,476 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 13,208 பேர் முடிகாணிக்கை செலுத்தினர். ரூ.2.54 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.


Tags:    

Similar News