செய்திகள்
வைகோ

மருத்துவ கல்லூரிகளில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 50 சதவீத இடம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்- வைகோ

Published On 2020-10-14 07:10 GMT   |   Update On 2020-10-14 07:10 GMT
தமிழ்நாட்டில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 50 சதவீத இடம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

சென்னை:

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி இடங்களில், அகில இந்தியத் தொகுப்புக்கு மாநிலங்கள் வழங்கும் மருத்துவ இடங்களில், இதர பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்க வேண்டிய இடஒதுக்கீட்டை மத்திய அரசு கடந்த நான்கு ஆண்டுகளாக மறுத்து வருகின்றது.

அதனைச் செயல்படுத்த உத்தரவிடக் கோரி தி.மு.க., ம.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தன.

தமிழ்நாட்டில் 69 விழுக்காடு இடஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 50 விழுக்காடு இடங்கள் வழங்கப்படுகின்றன.

மாநிலத் தொகுப்புகளிலிருந்து வழங்கப்படும் மருத்துவக் கல்விக்கான இடங்களில் ஓ.பி.சி. பிரிவுக்கு இடஒதுக்கீட்டை வழங்காததால், கடந்த ஆண்டு இளநிலை மருத்துவப் படிப்புகளில் 395 இடங்களும், முதுநிலை மருத்துவப் படிப்புக்கான இடங்களில் 425 இடங்களும் இதர பிற்படுத்தப்பட்டோருக்குப் பறிபோயின.

இதுதொடர்பான வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. மேலும் இதுபற்றிய சட்ட வரையறைகளை மூன்று மாதங்களில் உருவாக்கும் படியும், அதற்கான சிறப்புக் குழுவை அமைக்கும்படியும் உத்தரவிட்டது.

மருத்துவப் படிப்புக்கான இடஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்டோர் புறக்கணிக்கப்பட்டு உள்ள நிலையில், தமிழக அரசு ஒருபுறம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்துவிட்டு, மற்றொருபுறம் இந்த ஆண்டே இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த மத்திய அரசு நியமித்த குழுவில் வலியுறுத்தாதது ஏன்? தமிழக அரசு இந்தப் பிரச்சினையில் அலட்சியப் போக்குடன் செயல்பட்டது கண்டனத்துக்கு உரியது.

தமிழகத்தில் உள்ள 26 அரசு மருத்துவக் கல்லூரிகளில், இளநிலை படிப்புக்கு 3650 இடங்களும், மேற்படிப்புக்கு 1758 இடங்களும் உள்ளன. இவற்றிலிருந்து அகில இந்தியத் தொகுப்புக்கு வழங்கப்படும் இடங்களில், இதர பிற்படுத்தப்பட்டோருக்கு நடப்பு ஆண்டே 50 விழுக்காடு இடங்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News