செய்திகள்
மெயினருவியில் இன்று காலை ஆர்ப்பரித்து கொட்டிய தண்ணீர்.

நெல்லை, தென்காசி மாவட்டத்தில் பெய்த மழையால் அணைகளின் நீர்மட்டம் உயர்வு

Published On 2021-07-23 04:55 GMT   |   Update On 2021-07-23 05:05 GMT
தென்காசி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மற்றும் அணைப்பகுதியில் 2 நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக குற்றாலம் அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
தென்காசி:

தென்மேற்கு பருவமழை காரணமாக நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்றும் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது.

தென்காசி மாவட்டம் செங்கோட்டை, தென்காசி, குற்றாலம், புளியரை, கற்குடி, தவணை, கண்ணுப்புள்ளி மெட்டு, வல்லம், இலஞ்சி பகுதியில் விடிய விடிய தொடர்ந்து மழை பெய்தது.

இன்றும் தென்காசி, நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் மழை பெய்தது. அதிகபட்சமாக சேர்வலாறில் 48 மில்லி மீட்டர் மழை பதிவானது. இதே போல் குண்டாறில் 33 மில்லி மீட்டரும், தென்காசியில் 31 மில்லிமீட்டரும் மழை பதிவானது.

தொடர்ந்து பெய்த மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. 143 அடி உயரம் கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் இன்று காலை 108.95 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,149 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 1,404 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

156 அடி உயரம் கொண்ட சேர்வலாறு அணை நீர்மட்டம் 110.17 அடியாகவும், 118 அடி உயரம் கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 72 அடியாகவும் உள்ளது.

தென்காசி மாவட்டத்தில் கடனாநதி, ராமநதி அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளது. 85 அடி கொள்ளளவு கொண்ட கடனா அணையின் நீர்மட்டம் இன்று காலை 69.50 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 124 கன அடி தண்ணீர் பாசனத்துக்கு உபரி நீராக திறந்து விடப்படுகிறது.

இதேபோல் 84 அடி உயரம் கொண்ட ராமநதி அணை நீர்மட்டம் 68 அடியாகவும், 72 அடி கொள்ளளவு கொண்ட கருப்பாநதி அணை 63.98 அடியாகவும், 132 அடி உயரம் கொண்ட அடவி நயினார் 124 அடியாகவும் உள்ளது. விரைவில் இந்த அணை நிரம்பும் என தெரிகிறது. குண்டாறு அணை முழு கொள்ளளவை எட்டி நிரம்பி விட்டதால் அணைக்கு வரும் 31 கன அடி தண்ணீர் உபரி நீராக வெளியேற்றப்படுகிறது.

தென்காசி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மற்றும் அணைப்பகுதியில் 2 நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக குற்றாலம் அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

இன்று காலை குற்றாலத்தில் குளிர்ந்த காற்றுடன் சாரல் மழை பெய்தது. மெயினருவியின் இரண்டு கிளையிலும், ஐந்தருவியின் 5 கிளைகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதேபோல் புலியருவி, பழைய குற்றாலத்திலும் அதிகளவு தண்ணீர் விழுந்து வருகிறது.

எனினும் கொரோனா தடை காரணமாக சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. இதனால் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியும் ஆட்கள் நடமாட்டம் இன்றி அருவிப் பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டது.
Tags:    

Similar News