செய்திகள்
கோப்புபடம்

கடையநல்லூர் அருகே தோட்டத்தில் புகுந்து விவசாயி வெட்டிக்கொலை

Published On 2021-09-11 13:41 GMT   |   Update On 2021-09-11 13:41 GMT
கடையநல்லூர் அருகே தோட்டத்தில் புகுந்து விவசாயி சரமாரி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடையநல்லூர்:

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே திருவேட்டநல்லூர் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் திருமலைச்சாமி (வயது 65). விவசாயி. இவருடைய மனைவி சுப்புலட்சுமி. இவர்களுக்கு சண்முகராஜ் என்ற மகனும், 2 மகள்களும் உள்ளனர்.

திருமலைச்சாமிக்கு சொந்தமான தோட்டம் அப்பகுதியில் உள்ளது. அங்கு எலுமிச்சை மரக்கன்றுகளை பயிரிட்டு உள்ளார். தற்போது எலுமிச்சை நன்றாக காய்த்து அறுவடைக்கு தயாராக உள்ளது. இதனால் தினமும் இரவில் திருமலைச்சாமி தனது தோட்டத்துக்கு காவலுக்கு செல்வது வழக்கம்.

நேற்று முன்தினம் இரவில் திருமலைச்சாமி வழக்கம்போல் தோட்டத்துக்கு காவலுக்கு சென்றார். அங்குள்ள மோட்டார் அறைக்கு வெளியே கட்டிலில் திருமலைச்சாமி தூங்கி கொண்டிருந்தார்.

இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் நள்ளிரவில் நைசாக தோட்டத்துக்குள் புகுந்தனர். அவர்கள், அங்கு தூங்கி கொண்டிருந்த திருமலைச்சாமியை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

நேற்று காலையில் நீண்ட நேரமாகியும் திருமலைச்சாமி வீட்டுக்கு திரும்பி வராததால், அவரை தேடி மகன் சண்முகராஜ் சென்றார். அப்போது தந்தை திருமலைச்சாமி கொலை செய்யப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து அலறினார்.

இதுகுறித்து சொக்கம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே புளியங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இறந்த திருமலைச்சாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புளியங்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். திருமலைச்சாமியை கொலை செய்த மர்மநபர்கள் யார்? எதற்காக கொலை செய்தனர்? அவர் முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொலையாளிகளை பிடிப்பதற்காக போலீசார் தனிப்படை அமைத்து, பல்வேறு இடங்களுக்கும் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுதொடர்பாக 3 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர். கடையநல்லூர் அருகே தோட்டத்தில் புகுந்து விவசாயி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News