செய்திகள்
களக்காடு அருகே உள்ள கொடுமுடியாறு அணை நிரம்பி வழிவதை படத்தில் காணலாம்.

பாபநாசம் அணை நீர்மட்டம் 97அடியாக உயர்ந்தது

Published On 2019-08-12 05:33 GMT   |   Update On 2019-08-12 05:33 GMT
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்ததால் நேற்று 95 அடியாக இருந்த பாபநாசம் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்ந்து இன்று காலை 97.30 அடியாக உள்ளது.
நெல்லை:

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது.

மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் இன்று ஒரு சில இடங்களில் மட்டும் குறைந்த அளவு மழை பெய்தது. பெரும்பாலான இடங்களில் மழை பெய்யாததால், அணைகளுக்கு நீர்வரத்து குறைந்து விட்டது.

பாபநாசம் அணைக்கு கடந்த சில நாட்களாக வினாடிக்கு 5 ஆயிரம் கன அடிக்கும் அதிகமாக தண்ணீர் வந்தது. ஆனால் அது இன்று காலை 1523 கன அடியாக குறைந்தது. இதனால் தினசரி கிடுகிடுவென உயர்ந்த நீர்மட்டம் இன்று குறைவாகவே உயர்ந்துள்ளது.

நேற்று 95 அடியாக இருந்த பாபநாசம் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்ந்து இன்று காலை 97.30 அடியாக உள்ளது. நாளை அல்லது நாளை மறுநாள் நீர்மட்டம் 100 அடியை தாண்டி விடும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 128.93 அடியாக அப்படியே உள்ளது. மணிமுத்தாறு அணை நீர்மட்டம் சற்று உயர்ந்து 59.80 அடியாக உள்ளது.

குண்டாறு, கொடு முடியாறு அணைகள் முழுவதும் நிரம்பி வழிகிறது. கடனாநதி நீர்மட்டம் 64.20 அடியாகவும், ராமநதி நீர்மட்டம் 73 அடியாகவும், கருப்பாநதி நீர்மட்டம் 68.96 அடியாகவும் உயர்ந்து நிரம்பும் தருவையில் உள்ளது. அடவி நயினார் அணை நீர்மட்டம் 115 அடியாக உள்ளது.

நெல்லை மாவட்டத்தில் இன்று பெய்த மழை அளவு விபரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
குண்டாறு-25, செங்கோட்டை- 17, அடவிநயினார்-7, ஆய்க்குடி -2.4, பாபநாசம்-1, சேர்வலாறு-1.
Tags:    

Similar News