செய்திகள்
காலிக்குடங்களுடன் உளுத்துக்குப்பை கிராம மக்கள் சாலை மறியல் - 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
10 நாட்களாக குடிநீர் வினியோகம் இல்லாததால் காலிக்குடங்களுடன் உளுத்துக்குப்பை கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை அருகே உளுத்துக்குப்பை கிராமத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக அந்த பகுதியில் உள்ள டிரான்ஸ் பார்மர் பழுது காரணமாக குறைந்த மின் அழுத்தம் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மின் வசதி, குடிநீர் வினியோகம் இல்லாமல் பெரும் அவதிக்கு உள்ளாகினர்..
இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்தநிலையில் உளுத்துக்குப்பை கிராம மக்கள், மயிலாடுதுறை-சிதம்பரம் சாலையில் காலிக்குடங்களுடன் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை போலீசார், பொதுமக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது போலீசார் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். அதன்பேரில் சாலை மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.
இந்த சாலை மறியல் போராட்டத்தால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் மயிலாடுதுறைக்கு நடந்தே சென்றனர்.