செய்திகள்
கொரோனா தடுப்பூசி

2-ம் தவணை தடுப்பூசிக்கு 20 லட்சம் பேர் காத்திருப்பு

Published On 2021-07-17 14:35 GMT   |   Update On 2021-07-17 14:35 GMT
தமிழகத்திற்கு கோவேக்சின் தடுப்பூசி ஐதராபாத்தில் இருந்தும், கோவிஷீல்டு தடுப்பூசி புனேவில் இருந்து வருகிறது.

சென்னை:

தமிழகத்தில்  கொரோனா  2-ம் அலையின் பாதிப்பு படிப்படியாக குறைந்துவரும் நிலையில் தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

தற்போது வரை 2 கோடி மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ள நிலையில் தினசரி 6 லட்சம் தடுப்பூசி தேவை என்ற அளவில் தமிழகம் உள்ளது.

ஆனால் தமிழகத்திற்கு கோவிஷீல்டு தடுப்பூசி வரும் அளவுக்கு கோவேக்சின் தடுப்பூசி வருவதில்லை.

கடந்த ஜூன் மாதம் 35 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி வந்த நிலையில் கோவேக்சின் தடுப்பூசி 7 லட்சம்தான் வந்தது.

இந்த மாதம் கோவிஷீல்டு தடுப்பூசி 15 லட்சம் கிடைத்த நிலையில் கோவேக்சின் தடுப்பூசி 3 லட்சம்தான் கிடைத்துள்ளது.


இதில் கோவிஷீல்டு  தடுப்பூசி  போடுபவர்களுக்கு 2-ம் தவணை கால அவகாசம் 83 நாட்கள் வரை உள்ளது. ஆனால் கோவேக்சின் தடுப்பூசி போட்டவர்களுக்கு 28 நாட்களுக்கு பிறகு மெசேஜ் வருவதால் ஏராளமானோர் தடுப்பூசி போட ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வந்து சென்ற வண்ணம் உள்ளனர்.

ஆனால் கோவேக்சின் தடுப்பூசி போதிய அளவுக்கு கிடைக்காததால் 2-ம் தவணை தடுப்பூசிக்கு 20 லட்சம் பேர் காத்திருக்கிறார்கள். தற்போது உள்ள கோவேக்சின் தடுப்பூசி 3 நாட்களுக்கு மட்டுமே கை இருப்பு உள்ளது.

கோவேக்சின் தடுப்பூசி ஐதராபாத்தில் இருந்தும், கோவிஷீல்டு தடுப்பூசி புனேவில் இருந்து வருகிறது.

கோவிஷீல்டு தடுப்பூசி வருவதில் 10-ல் ஒரு பங்கு அளவு மட்டுமே கோவேக்சின் கிடைக்கிறது. தயாரிப்பு குறைவாக உள்ளதால் அனுப்பி வைக்கப்படும் மருந்து குறைவாக உள்ளது.

இதுவரை 26 லட்சத்து 28 ஆயிரத்து 174 டோஸ் கோவேக்சின் செலுத்தப்பட்டுள்ளது. 28 நாட்களில் 2-ம் தவணை வந்துவிடுவதால் அதற்கேற்ப தடுப்பூசி வருவதில்லை. தற்போது தமிழகத்தில் கோவேக்சின் தடுப்பூசி போட்டவர்களில் 10 சதவீதம் பேர் மட்டுமே 2-ம் தவணையை நிறைவு செய்துள்ளனர். மற்றவர்கள் காத்திருக்கிறார்கள்.

அதனால் கூடுதலாக தடுப்பூசியை அனுப்பி வைக்குமாறு மத்திய அரசை தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
Tags:    

Similar News