திருப்பதியில் தங்கும் அறையில் பக்தர் தூக்கிட்டு தற்கொலை
திருமலை:
ஐதராபாத்தை சேர்ந்தவர் ஸ்ரீதர் (வயது42). தனியார் நிறுவன ஊழியர். இவர் நேற்று முன்தினம் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக திருப்பதி வந்தார்.
திருமலை வகுலமாதா தேவஸ்தான பக்தர்கள் ஓய்வறையில் தங்கினார். அவருக்கு வழங்கப்பட்ட அறையின் நேரம் நிறைவு பெற்றதையடுத்து தேவஸ்தான ஊழியர்கள் அந்த அறையின் கதவை தட்டி பார்த்தனர். நீண்ட நேரமாகியும் திறக்கவில்லை.
இதையடுத்து ஜன்னல் வழியாக பார்த்த போது ஸ்ரீதர் மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதுகுறித்து திருமலை 2-வது டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பதி ரூயா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவரது மைத்துனர் அஸ்வினுடன் ஏழுமலையானை தரிசனம் செய்ய ஸ்ரீதர் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தது தெரியவந்தது.
ஆனால் ஸ்ரீதர் அஸ்வினை அழைத்து வராமல் தனியாக வந்து அறை எடுத்து தங்கியுள்ளார். மேலும் சாமி தரிசனத்திற்கு பிறகு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.