செய்திகள்
சூளகிரியில் கொரோனா பயத்தில் பள்ளி மாணவி தற்கொலை
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் கொரோனா பயம் காரணமாக 10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சூளகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி மில்லத் நகரை சேர்ந்த மாதேஷ். இவரது மகள் ஜீவிதா (வயது16). இவர் சூளகிரியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில், கடந்த 10 நாட்களாக ஜீவிதா காய்ச்சல் மற்றும் தொண்டை வலியால் அவதிப்பட்டார். அவர், பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதனால் தனக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுவிட்டது என்று நினைத்து ஜீவிதா மனவேதனை அடைந்து வந்தார். மேலும் தொடர்ந்து கொரோனா பயத்தில் ஜீவிதா மன உளைச்சலுடன் இருந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஜீவிதா தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து அவரது தாய், சூளகிரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.