பெண்கள் உலகம்
சமையல் எரிவாயு

சமையல் எரிவாயு: செலவை குறைக்க 20 வழிகள்

Published On 2022-04-26 04:38 GMT   |   Update On 2022-04-26 04:38 GMT
லைட்டரை கையில் எடுத்துவைத்துக்கொண்டு ஸ்டவ்வில் கியாசை திறந்தால்போதும். கியாசை திறந்துவைத்துக்கொண்டு லைட்டரையோ, தீப்பெட்டியையோ தேடிக்கொண்டிருந்தால் கியாஸ் வீணாகும்.
நான்கு பேர்களைகொண்ட ஒரு குடும்பத்திற்கு சராசரியாக 35 நாட்களுக்கு ஒரு கியாஸ் சிலிண்டர் போதுமானது. அதைவிட குறைந்த நாட்களில் கியாஸ் காலியாகிவிட்டால், அளவுக்கு அதிகமாக செலவாகிக்கொண்டிருப்பதாக அர்த்தம். சமையல் எரிவாயுவை சிக்கனமாக செலவிட 20 வழிகள்!

- கியாஸ் ஸ்டவ், சமையல் செய்யும் பாத்திரங்கள் போன்றவைகளை எப்போதும் சுத்தமாக வைத்திருங்கள். பாத்திரங்களின் அடியில் இருக்கும் கரியும், பர்னரில் இருக்கும் அழுக்கும் கியாஸ் செலவை அதிகரிக்கும்.

- எப்போதும் தரம் உயர்ந்த ஸ்டவ்வை வாங்குங்கள். பர்னர், கியாஸ் பைப், ரெகுலேட்டர் போன்றவைகள் வழியாக மிகக்குறைந்த அளவில் கியாஸ் லீக் ஆக வாய்ப்பிருக்கிறது. அதனை பரிசோதனை செய்யுங்கள்.

- ஸ்டவ்வில் தீ நீலநிறத்துடனோ, நிறமற்றதாகவோ எரியவேண்டும். மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறத்தில் எரிந்தால், ஏதோ தடைகள் இருப்பதாக அர்த்தம். எண்ணெய், அழுக்கு, தண்ணீர், கறை ஏதாவது பர்னரில் தடையை ஏற்படுத்தியிருந்தால்தான் எரியும் தீயின் நிறம் மாறும்.

- வாரத்தில் ஒரு நாள் பர்னரை சுத்தப்படுத்தவேண்டியது அவசியம். கொதிக்கும்போது ஸ்டவ்வில் உணவுப் பொருட்கள் விழுந்தால், சமையல் முடிந்ததும் அதை சுத்தம் செய்துவிடவேண்டும்.

- எளிதாக சூடாகி, விரைவாக சமையலை முடிப்பதற்கு உதவும் பாத்திரங்களை கியாஸ் ஸ்டவ்வில் பயன்படுத்தவேண்டும். காப்பர் பிளேட்டிங் கொண்டவைகளும், அடிப்பாகம் அதிகம் விரியாதவைகளும் விரைவாக சமையலை முடிக்க வகைசெய்யும். சமையல் பாத்திரங்களின் உள்ளேயோ, வெளியேயோ கீறலோ, வளைவோ இருந்தால் கியாஸ் செலவு அதிகமாகும். அதனால் சேதமடைந்த பாத்திரங்களை சமையலுக்கு பயன்படுத்தவேண்டாம்.

- காப்பர் மற்றும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாத்திரங்கள் வேகமாக சூடாகும். அதுபோல் சூடு அனைத்து பகுதிகளுக்கும் சீராக பரவவும் செய்யும். ஒருமுறை சூடாகிவிட்டால் அந்த சூடு அதிக நேரம் நிலைத்து நிற்கவும் செய்யும். அத்தகைய பாத்திரங்களை சமையலுக்கு பயன்படுத்துவது அவசியம்.

- சமையல் செய்யும் பாத்திரத்தை கழுவி, துடைத்த பின்பு அடுப்பில் வைத்தால் போதும். துடைக்காவிட்டால் பாத்திரத்தில் தண்ணீர் ஒட்டியிருக்கும். அது சூடாகி, ஆவியாகவும் கியாஸ் செலவாகும்.

- லைட்டரை கையில் எடுத்துவைத்துக்கொண்டு ஸ்டவ்வில் கியாசை திறந்தால்போதும். கியாசை திறந்துவைத்துக்கொண்டு லைட்டரையோ, தீப்பெட்டியையோ தேடிக்கொண்டிருந்தால் கியாஸ் வீணாகும். நாபை திறந்தாலே தீ எரியும் `செல்ப் இக்னிஷன் ஸ்டவ்'வை பயன்படுத்துவதும் நல்லது.

- சமையலுக்கு தேவையான அனைத்தையும் தயாராக்கி கைக்கு அருகில்வைத்துவிட்டு சமையலை தொடங்குங்கள். சமையலை ஆரம்பித்துவிட்டு இடையே வெங்காயம் நறுக்கவும், கறிவேப்பிலை கிள்ளவும் செல்லாதீர்கள். தேவையில்லாமல் ஸ்டவ்வை எரியவிட்டால் கியாஸ் வீணாகிக்கொண்டிருக்கும். இடையில் வேறு வேலைகள் செய்யவேண்டியிருந்தால், சிறிது நேரத்திற்கு கியாசை ஆப் செய்துவிடுங்கள்.

- சமையலுக்கு சிறிய பர்னரை உபயோகித்தால், பெரிய பர்னரைவிட பத்து சதவீத கியாஸ் மிச்சமாகும். பர்னரின் அளவுக்கு தகுந்த பாத்திரங்களை சமையலுக்கு பயன் படுத்தவேண்டும். தீ, பாத்திரத்தின் அடிப்பகுதியில் முழுவதும் பரவி எரியவேண்டும். அடிப்பாகம் குறுகிய பாத்திரமாக இருந்தால், தீயின் அளவை குறைக்கவேண்டும். குறைக்காமல் `புள் பிளேம்' கொடுத்தால் ஓரங்களிலும் தீ எரிந்து, கியாஸ் வீணாகும். கொஞ்சமாக சமைக்கவேண்டும் என்றால் சிறிய பாத்திரம் போதுமானது.

- உணவுப் பொருள் கொதிக்கத் தொடங்கியதும், பிளேமை மீடியத்திற்கோ, சிம்மிற்கோ மாற்றிவிட்டு பாத்திரத்தை மூடிவைத்திடவேண்டும். அந்த குறைந்த அளவு தீயே உணவு நன்றாக வேகுவதற்கு போதுமானது. இப்படி செய்தால் 25 சதவீதம் அளவுக்கு கியாஸ் மிச்சமாகும்.

- குழம்பு வகைகளில் அளவுக்கு அதிகமாக தண்ணீர் சேர்க்கவேண்டாம். அதிகமாக தண்ணீர் சேர்த்தால் அது வற்றுவதற்கு அதிக நேரமாகும். அதனால் கியாஸ் வீணாகும்.

- பிரஷர் குக்கரின் பயன்பாடு எரிவாயு செலவைக் குறைக்கும். அதோடு சமையல் செய்யும் நேரத்தின் அளவையும் குறைத்துவிடும். சாதாரண பாத்திரத்தில் பயறு வேகுவதற்கு தேவையான கியாசைவிட, பிரஷர் குக்கரில் வேகவைத்தால் 46 சதவீத எரிவாயு மிச்சமாகும். பிரஷர் குக்கரில் செப்பரேட்டர் பயன்படுத்தி கூடுதலாக சில பொருட்களை வேகவைத்தால் பெருமளவு எரிபொருள் மிச்சமாகும்.

- பிரஷர் குக்கர் பயன்படுத்தும்போது சில விஷயங்களை கட்டாயம் கடைப்பிடிக்கவேண்டும். குக்கரை அடைத்து அடுப்பில் வைத்து, ஆவி வந்த பின்பே வெயிட்டை பொருத்தவேண்டும். சிறிய, பெரிய குக்கரை வாங்கிவைத்துக்கொண்டு சமைக்கும் உணவுப்பொருட்களின் அளவுக்குதக்கபடி அவைகளை பயன்படுத்தவேண்டும்.

- தானியங்கள், பயறு வகைகளை தண்ணீரில் ஊறவைத்த பின்பு வேகவையுங்கள். பிரிட்ஜ்ஜில் இருக்கும் பொருட்களை அவசரமாக வெளியே எடுத்து வேகவைக்கக் கூடாது. வெளியே எடுத்த பொருளின் குளிர்ச்சி நிலை மாறி, இயல்பான தட்பவெப்ப நிலைக்கு வந்த பின்பே வேகவைக்கவேண்டும். குளிர்ச்சி நிலையிலே சமைத்தால் அதிக அளவு எரிவாயு செலவாகும்.

- சமைக்கும் பொருள் எந்த அளவுக்கு வேகவேண்டும் என்ற கணக்கு சமைப்ப வருக்கு தெரிந்திருக்கவேண்டும். தேவையில்லாமல் அதிக நேரம் பொருட்களை வேகவைத்தால் சமையல் எரிவாயு அதிகமாக செலவாகுவதோடு, உணவுப் பொருளின் சுவையும் குன்றிவிடும்.

- குடும்பத்தில் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்பதை கணக்கிட்டு, அத்தனை பேரின் தேவைக்கு தக்கபடி மட்டும் சமையல் செய்யுங்கள். எவ்வளவு அரிசிக்கு எத்தனை கப் தண்ணீர் என்பதை சரியான அளவில் சேர்த்தால் கியாஸ் வீண் ஆகாது.

- குடிநீர் ஐந்து நிமிடங்களாவது கொதிக்கவேண்டும். ஆனால் முதல் கொதி வந்ததும், பிளேமை சிம்மில் ஆக்கிவிடவேண்டும். இப்படி ஒவ்வொரு பொருளை சமைக்கும்போதும் லோ, மீடியம், ஹை என்று தேவைக்கு தக்கபடி பயன்படுத்துங்கள்.

- மதியத்திற்கும், இரவுக்கும் தேவையான உணவை ஒரே நேரத்தில் சமைத்து ஹாட் பாக்சில் வைத்திருக்கவேண்டும். எல்லோரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடவேண்டும். இல்லாவிட்டால் மீண்டும் மீண்டும் சூடாக்கவேண்டியதிருக்கும். அதனால் கியாஸ் அதிகமாக செலவாகும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமாக சமைப்பதையும் தவிர்க்கவேண்டும்.

- ஒன்றுக்கு மேற்பட்ட உணவுப் பொருட்களை ஒரே பாத்திரத்தில் வைத்து சமைக்க முயற்சி செய்யுங்கள். பாஸ்தா வேகவைக்கும் பாத்திரத்தின் மேலேவைத்து காய்கறிகளை ஆவிஏற்றி வேகவைக்கலாம். இப்படிப்பட்ட முறையில் சமையல் செய்ய தேவையான மல்ட்டி ஸ்டீமர்கள் மார்க்கெட்டில் கிடைக்கின்றன.
Tags:    

Similar News