ஆன்மிகம்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் 3 நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு தடை

Published On 2021-08-21 05:08 GMT   |   Update On 2021-08-21 05:45 GMT
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் 3 நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் நேற்று சுபமுகூர்த்த தினம் என்பதால் முன்பதிவு செய்த 26 திருமணங்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது.
பஞ்ச பூதஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலைஅருணாசலேஸ்வரர் கோவில் விளங்குகிறது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு உத்தரவுப்படி வாரத்தில் 3 நாட்கள் அருணாசலேஸ்வரர் கோவில் மூடப்பட்டு வருகிறது. கடந்த திங்கட்கிழமை முதல் நேற்றுமுன்தினம் வரை 4 நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வந்தனர்.

இதையடுத்து இக்கோவிலில் நேற்று முதல் நாளை (ஞாயிற்றுக்கிழமை) வரை 3 நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டு கோவில் கோபுர நுழைவு வாயில்கள் மூடப்பட்டது. பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படவில்லை.

இந்த நிலையில் ஆடி மாதம் நிறைவடைந்து ஆவணி மாதத்தில் வரும் முதல் சுபமுகூர்த்த தினம் நேற்று என்பதால் அதிகாலை முதல் திருவண்ணாமலையில் மக்கள் கூட்டம் அதிகளவில் உள்ளது. நேற்று முன்தினம் இரவில் அலங்கார வாகனத்தில் மணமக்கள் ஊர்வலம் போன்றவை நடைபெற்றது.

திருவண்ணாமலை நகரில் உள்ள பெரும்பாலான திருமண மண்டபங்களில் நேற்று காலை திருமண நிகழ்ச்சிகள் நடைபெற்றன. திருமண நிகழ்ச்சிக்கு வந்த வெளியூர் மக்கள் நேற்று முன்தினம் அருணாசலேஸ்வரர் கோவிலில் பலர் சாமி தரிசனம் செய்தனர். நேற்று வந்த வெளியூர் மக்கள் சாமி தரிசனம் செய்ய முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். அருணாசலேஸ்வரர் கோவிலில் முன்பதிவு செய்து இருந்த 26 திருமணங்கள் கோவிலில் நடைபெற அனுமதி அளிக்கப்பட்டது.

அப்போது மணமக்களின் குடும்பத்தை சேர்ந்த 10 பேர் மட்டும் சமூக இடைவெளியுடன் உள்ளே செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. மேலும் மண்டபங்களில் திருமணம் செய்த மணமக்கள் கோவில் ராஜகோபுரம் முன்பும், 16 கால் மண்டபம் முன்பும் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் நேற்று வரலட்சுமி விரதம் என்பதால் அதற்கான பூஜை பொருட்களை வாங்கவும் பொதுமக்கள் திருவண்ணாமலை நகரில் உள்ள கடை வீதிகளில் குவிந்தனர். இதனால் மக்கள் கூட்டம் அலைமோதியது.
Tags:    

Similar News