தொழில்நுட்பம்
பிரியாவிடை கொடுக்கும் பிளாக்பெரி மெசஞ்சர்
பிளாக்பெரி இயங்குதளத்தின் குறுந்தகவல் செயலியான பிளாக்பெரி மெசஞ்சர் சேவை நிறுத்தப்படுகிறது.
பிளாக்பெரி நிறுவனத்தின் பி.பி.எம். (பிளாக்பெரி மெசஞ்சர்) சேவை இன்றுடன் (மே 31) நிறுத்தப்படுகிறது. இன்று நள்ளிரவு 11.59 மணிக்கு பின் பிளாக்பெரி மெசஞ்சர் செயலிக்கான வசதி முற்றிலும் நிறுத்தப்பட இருக்கிறது.
இன்று வரை நாங்கள் உருவாக்கியவைக்காக நாங்கள் பெருமை கொள்கிறோம். தொழில்நுட்ப துறை மிகவும் போட்டி நிறைந்ததாக இருக்கிறது. எங்களின் விடாமுயற்சியிலும் பயனர்கள் மற்ற தளங்கள் வழங்கும் சேவைகளை பயன்படுத்த துவங்கிவிட்டனர். இதன் காரணமாக புதிய வாடிக்கையாளர்களை பெறுவது கடினமான ஒன்றாகிவிட்டது.
பிளாக்பெரி மெசஞ்சர் சேவைக்கு பிரியாவிடை கொடுப்பது எங்களுக்கு வருத்தமாக இருந்தாலும், இதனை கடந்து முன்னேற வேண்டிய நிலையில் இருக்கிறோம் என பிளாக்பெரி தனது அதிகாரப்பூர்வ வலைதளத்தில் பதிவிட்டுள்ளது.
பி.பி.எம்.இ. என அழைக்கப்படும் என்டர்பிரைஸ் எடிஷனை பயன்படுத்துவோர் தொடர்ந்து சேவையை இயக்க முடியும். இனியும் பி.பி.எம். சேவையை பயன்படுத்த விரும்புவோர் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். தளங்களில் இருந்து என்டர்பிரைஸ் எடிஷனை டவுன்லோடு செய்து ஆறு மாதங்களுக்கு 2.50 டாலர்கள் கட்டணம் செலுத்தி பயன்படுத்தலாம்.
பி.பி.எம்.இ. சேவையிலும் முழுமையான என்க்ரிப்ஷன் வழங்கப்படுகிறது. இத்துடன் குறுந்தகவல்களை எடிட் செய்யும் வசதி, அனுப்பிய குறுந்தகவல்களை திரும்பப்பெறும் வசதி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.