செய்திகள்
குடிமங்கலம் ஒன்றியத்தில் இ.சேவை மையம் - கிராமமக்கள் எதிர்பார்ப்பு
போதிய பஸ் வசதி இல்லாத நிலையில் 30 கி.மீ., க்கும் அதிகமான தொலைவு பயணித்து உடுமலையிலுள்ள இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கின்றனர்.
உடுமலை:
குடிமங்கலம் ஒன்றியத்தில் 23 ஊராட்சிகள் உள்ளன. மக்கள் தொகை அடிப்படையில் பெதப்பம்பட்டி, குடிமங்கலம் என இரு வருவாய் உள்வட்டங்கள் உள்ளன.
கிராமங்களை மட்டும் உள்ளடக்கிய வருவாய் உள்வட்டத்தில் வருவாய்த்துறை மற்றும் இதர அரசுத்துறைகள் சார்ந்த அனைத்து சேவைகளுக்கும் போதியளவு இ-சேவை மையம் இல்லாததால் மக்கள் சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
அனைத்து சேவைகளுக்கும், உடுமலை நகரிலுள்ள இ-சேவை மையங்களுக்கே செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. போதிய பஸ் வசதி இல்லாத நிலையில் 30 கி.மீ., க்கும் அதிகமான தொலைவு பயணித்து உடுமலையிலுள்ள இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கின்றனர்.
அங்கும் நாளொன்றுக்கு விண்ணப்பிக்க குறைந்தளவு டோக்கன்களே வினியோகிக்கப்படுவதால் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.
தற்போது ஸ்மார்ட் ரேஷன்கார்டில் கைரேகை பதிவு செய்தல், ஆதார் அட்டையில் திருத்தம், புதிதாக ஆதார் அட்டை பதிவு செய்தல் உள்ளிட்ட சேவைகளுக்காக நாள்தோறும் நூற்றுக்கணக்கான கிராம மக்கள் உடுமலை தாலுகா அலுவலகத்திலுள்ள இ-சேவை மையத்தில் குவிகின்றனர்.
இத்தகைய சேவைகள் கிராமப்புறத்திலுள்ள சேவை மையங்களில் வழங்கப்படுவதில்லை. எனவே, அனைத்து சேவைகளையும் உள்ளடக்கிய இ-சேவை மையத்தை குடிமங்கலம் ஒன்றியத்தில் துவக்க வேண்டும் என கிராமமக்கள் எதிர்பார்க்கின்றனர்.