ஆன்மிகம்
தானகர்ஷன ஹோமம்

செல்வம் பெருக தானகர்ஷன ஹோமம்

Published On 2019-11-08 05:08 GMT   |   Update On 2019-11-08 05:08 GMT
செல்வம் சேர்க்கும் தர்ம வழியே தானகர்ஷன ஹோமம் ஆகும். தை மாத வெள்ளிக்கிழமை நல்ல முகூர்த்தத்தில் தானகர்ஷன ஹோமத்தைச் செய்யலாம்.
ஹோமங்கள் பல்வேறு நன்மைகளை வேண்டி நடத்தப்படுகிறது. ஆதிகாலத்தில் வெட்ட வெளிகளில்தான் ஹோமங்கள், யாகங்கள் நடத்தப்பட்டன. தற்போது எல்லா இடங்களிலும் தேவைக்கு ஏற்ப ஹோமம் செய்யப்படுகிறது.

ஆயுள் பெற, பித்ருக்கள் ஆசி பெற என்று பலவகை ஹோமங்கள் உள்ளது. அந்த வகையில் செல்வம் பெறவும் ஹோமம் இருக்கிறது. அந்த வகை ஹோமத்துக்கு தானகர்ஷன ஹோமம் என்று பெயர். செல்வம் சேர்க்கும் தர்ம வழியே தானகர்ஷன ஹோமம் ஆகும். வடநாட்டில் தனலட்சுமி பூஜை தீபாவளி சமயத்தில் கொண்டாடப்படுகிறது. தாம் சேர்த்த பொருளையெல்லாம் வட நாட்டவர்கள் அந்த யாக பூஜையில் வைத்து வழிபடுவர்.

ஸ்ரீரங்கத்தில் தீபாவளியன்று ‘ஜாலி அலங்காரம்’ என கொண்டாடப்படுகிறது. தை மாத வெள்ளிக்கிழமை நல்ல முகூர்த்தத்தில் தானகர்ஷன ஹோமத்தைச் செய்யலாம். இதனால் தொழில், வியாபாரம், வேலை இவற்றின் மூலம் கிடைக்கும் வருமானமும், செல்வமும் பெருகும். தனம் சேர்வது தானம் செய்ய, தானம் செய்வது தர்மம் தலை காக்க என்று சொல்லுவார்கள். எனவே மற்ற அருளைவிட லட்சுமியின் அருள் ஒன்றே தலை சிறந்தது. அதை பெற்றுத் தர வழி வகுக்கும் ஹோமம் இதுவாகும்.

இந்த ஹோமம் செய்யும் தினத்தன்று அதிகாலையில் குளித்து, சுத்தமான துணி உடுத்தி, திலகமிட்டுக் கொண்டு ஹோமத்திற்குத் தயாராக வேண்டும். முதலில் பூஜையில் அமர்ந்து உரிய முறையில் சங்கல்பம் செய்து கொள்ளவும். பிறகு நம் செல்வத்தையெல்லாம் ஒரு குடத்திலிட்டு அதில் சுவர்ண லட்சுமியை ஆவாஹனம் செய்ய வேண்டும்.

வட்டமான ஹோம குண்டத்தில் கிழக்கு நோக்கி அமர்ந்து பூஜிக்க வேண்டும். தேவதா ஆஜ்யபாகம், சமீதா தானம் செய்யவும். பிறகு சுத்தமான பசுநெய், தாமரைப்பூ, தங்கக்காசு, சர்க்கரைப் பொங்கல் மூலம் 108 தடவை ஆவர்த்தி ‘ஹிரண்யவர்ணா..-.’ என்ற வேத மந்திரம் மூலம் ஹோமம் செய்யவும். அடுத்து பிராயச்சித்த ஹோமம் செய்யவும். சொக்கத் தங்கம், பட்டு முதலியவற்றுடன் மட்டைத் தேங்காய் வைத்து பூர்ணாஹூதி செய்து ஹோமம் முடிக்கவும்.

Tags:    

Similar News