அசாமில் இந்த தேர்தலில் பாஜக ஆட்சிக்கு வரமுடியாது- மாநில காங்கிரஸ் தலைவர் சொல்கிறார்
கவுகாத்தி:
அசாம் மாநிலத்தில் இந்த மாதம் 27-ந்தேதி தொடங்கி 3 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது.
அங்கு பாரதீய ஜனதா ஆட்சி நடந்து வரும் நிலையில் அந்த கட்சி பல சிறிய கட்சிகளுடன் சேர்ந்து கூட்டணி அமைத்துள்ளது.
அதேபோல எதிர்க்கட்சிகளான காங்கிரசும் வலுவான கூட்டணியை அமைத்து வருகிறது. இதுவரை பாரதீய ஜனதாவுடன் இருந்த பல கட்சிகளை காங்கிரஸ் இழுத்துள்ளது.
அசாமில் முக்கிய பெரிய கட்சிகளில் ஒன்றான போடோ மக்கள் முன்னணி கட்சி கடந்த தேர்தலில் பாரதீய ஜனதாவுடன் கூட்டணி அமைத்து இருந்தது. அப்போது இந்த கட்சி 12 தொகுதிகளில் வெற்றி பெற்று இருந்தது.
ஆனால் இந்த தடவை போடோ மக்கள் முன்னணி காங்கிரசுடன் கூட்டணி அமைத்துள்ளது. இது காங்கிரசுக்கு பெரும் பலமாக அமைந்துள்ளது. இது தொடர்பாக அசாம் மாநில காங்கிரஸ் தலைவர் ரிபுன்போரா கூறியதாவது:-
அசாமில் இதுவரை இருந்த அரசியல் நிலைமை இப்போது மாறி விட்டது. எங்கள் அணியில் பல கட்சிகள் சேர்ந்துள்ளன.
ஒரு ஆற்றில் பல சிற்றாறுகள் இணைந்து அந்த ஆற்றை பெரிய ஆறாக மாற்றுவது போல காங்கிரசை வலுவாக மாற்றி உள்ளன.
எனவே இந்த தடவை பாரதீய ஜனதாவால் ஆட்சிக்கு வர முடியாது. காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
போடோ மக்கள் முன்னணி தலைவர் ஹக்ரமா மொகிலரி கூறும்போது, “நாங்கள் பாரதீய ஜனதா பக்கம் இல்லாததால் அவர்களால் வெற்றி பெற முடியாது. அசாமை விட்டே பாரதீய ஜனதாவை வெளியேற்றுவோம்.
பாரதீய ஜனதா ஆட்சியில் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. அசாம் மக்களின் விருப்பத்துக்கு ஏற்பவே நாங்கள் காங்கிரஸ் அணியில் சேர்ந்து இருக்கிறோம்” என்று கூறினார்.