செய்திகள்
தற்கொலை

மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் குதித்து ஓய்வுபெற்ற மின் ஊழியர் தற்கொலை

Published On 2021-07-18 10:35 GMT   |   Update On 2021-07-18 10:35 GMT
கோவை குனியமுத்தூரை சேர்ந்த ஓய்வுபெற்ற மின் ஊழியர் வீடு கட்டுவதற்காக வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாத மனவேதனையில் தற்கொலை செய்து கொண்டார்.

கோவை:

கோவை குனியமுத்தூரை சேர்ந்தவர் வேணுகோபால் (வயது 66). ஓய்வுபெற்ற மின் ஊழியர். இந்த நிலையில் வேணுகோபால் வீடு கட்டுவதற்காக கடன் வாங்கியதாக தெரிகிறது. அதனை அவரால் சரியான நேரத்தில் திருப்பி செலுத்த முடியவில்லை. இதனால் அவர் மனவேதனையுடன் இருந்து வந்தார்.

சம்பவத்தன்று விரக்தி அடைந்த அவர் வீட்டில் யாரிடமும் சொல்லாமல் மேட்டுப்பாளையம் பவானி ஆறு பகுதிக்கு சென்றார். அங்கு திடீரென வேணுகோபால் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதை கண்ட அங்கு இருந்தவர்கள் இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்குஅரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோன்று திருப்பூர் எஸ்.எம்.எஸ் நகரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி சரோஜினி (49). இவர் கடந்த சில நாட்களாக உடல்நிலை சரி இல்லாமல் அவதிப்பட்டு வந்தார். அதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதனால் மனவேதனை அடைந்த அவர் யாரிடமும் சொல்லாமல் வீட்டை விட்டு வெளியே சென்றார். வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் குடும்பத்தினர் அவரை அக்கம் பக்கம் மற்றும் உறவினர் வீடுகளில் தேடி பார்த்தனர்.

ஆனால் கிடைக்கவில்லை. இந்த நிலையில் அவர் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் இறந்து கிடப்பதாக குடும்பத்தினருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற குடும்பத்தினர் சரோஜினியின் உடலைக் கண்டு கதறி அழுதனர். பின்னர் இதுகுறித்து மேட்டுப் பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News