செய்திகள்
மொபட்டில் சென்று வாக்கு சேகரித்த மன்சூர்.

மன்சூர் அலிகான் தனி ஒருவனாக மொபட்டில் சென்று ஆதரவு திரட்டுகிறார்

Published On 2021-03-24 08:43 GMT   |   Update On 2021-03-24 08:43 GMT
மன்சூர் அலிகான் கடையில் நிற்பதை பார்த்ததும் ஏராளமானோர் கடை முன்பு குவிந்து அவருடன் செல்பி புகைப்படம் எடுத்து கொண்டனர்.
கோவை:

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் நடிகர் மன்சூர் அலிகான் சுயேட்சையாக போட்டியிடுகிறார்.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நான் தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிட போவதில்லை. எங்கு சென்றாலும் எவ்வளவு பணம் வாங்கினீர்கள் என கேட்கின்றனர். அது எனக்கு மன வருத்தத்தை கொடுக்கிறது. அதனால் நான் தேர்தலில் இருந்து விலக போவதாக அறிவித்தார். எனவே அவர் வேட்புமனுவை திரும்ப பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் மறுநாளே நான் நிச்சயமாக தேர்தலில் போட்டியிடுவேன். வேட்புமனுவை திரும்ப பெறமாட்டேன். மனைவி மற்றும் மகளின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த முடிவை எடுத்ததாக தெரிவித்தார்.

களத்தில் இந்த புலி இறங்கி விட்டது. வெற்றியோ, தோல்வியோ அதனை சந்தித்து விடலாம் என்ற முடிவில் உறுதியாக இருக்கிறேன். அவருக்கு தென்னந்தோப்பு சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

நேற்று தனது தொகுதிக்குட்பட்ட செல்வபுரம் பகுதியில் மொபட்டில் சென்று பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது அங்குள்ள இளநீர் கடைக்கு சென்ற அவர் மொபட்டில் இருந்தவாறே இளநீரை எடுத்து வெட்டி கொடுத்து வியாபாரம் செய்து மக்களிடம் தென்னந்தோப்பு சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். மன்சூர் அலிகான் கடையில் நிற்பதை பார்த்ததும் ஏராளமானோர் கடை முன்பு குவிந்து அவருடன் செல்பி புகைப்படம் எடுத்து கொண்டனர்.

தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள பேக்கரி, கடை முன்பு நின்றிருந்த மக்களிடம் மொபட்டில் இருந்தவாறு ஆதரவு திரட்டினார்.

இன்று காலை பேரூர் படித்துறையில் நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது அங்கு திருமண நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. இதை பார்த்த அவர் உடனடியாக திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றார். அங்கு மணக்களை ஆசீர்வதித்து வாழ்த்து தெரிவித்தார். அவர்கள் அவரிடம் புகைப்படம் எடுத்து கொள்ளலாமா? என கேட்கவே அவர்களுடன் சேர்ந்து குழு புகைப்படம் எடுத்து கொண்டார்.

பின்னர் அங்கிந்து சிறிது தூரம் நடந்து சென்ற மன்சூர் அலிகான், பாட்டி ஒருவர் தள்ளுவண்டி கடையில் உணவு வியாபாரம் செய்வதை பார்த்தார்.

அந்த கடைக்கு சென்று பாட்டியிடம் நலம் விசாரித்து, வியாபாரம் எப்படி இருக்கிறது. நன்றாக போகிறதா? என கேட்டு தெரிந்து கொண்டு தள்ளாத வயதிலும் வியாபாரம் செய்து வாழ்க்கை நடத்தும் அந்த மூதாட்டியை பாராட்டினார்.

பின்னர் எனக்கு சாப்பிட ஒரு தக்காளி சாதம் தாருங்கள் என கேட்டு வாங்கி சாப்பிட்டார். அதற்கான பணம் ரூ.20-யையும் மூதாட்டியிடம் கொடுத்து சென்றார்.

தொடர்ந்து பேரூர் பகுதியில் வீடு, வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
Tags:    

Similar News