வழிபாடு
விழாக்களின் சங்கமம் பங்குனி உத்திரம்

விழாக்களின் சங்கமம் பங்குனி உத்திரம்

Published On 2022-03-18 06:35 GMT   |   Update On 2022-03-18 06:35 GMT
பங்குனி உத்திரம் அன்று நீங்கள் எந்த தெய்வத்தை வழிபட்டாலும் சரி, எந்த ஆலய விழாவில் கலந்து கொண்டாலும் சரி மறக்காமல் குலதெய்வ வழிபாட்டை செய்ய வேண்டும்.
மாதம்தோறும் உத்திர நட்சத்திரம் வருகிறது என்றாலும் பங்குனியில் வரும் உத்திரத்திற்கு பெருமை அதிகம். ஏனென்றால் தெய்வங்களே தேர்வு செய்து கொண்ட நட்சத்திரம் அந்த திருநாள்.

பார்வதி - சிவன் திருமணம், முருகன் --தெய்வானை திருமணம், ஆண்டாள் -ரெங்க மன்னார் திருமணம், மீனாட்சி -சுந்தரேஸ்வர் திருமணம் என தெய்வீகத்திருமணங்கள் பலவும் பங்குனி உத்திரத்தில் தான் நிகழ்ந்தன என்று புராணங்கள் கூறுகின்றன.

இவை மட்டுமா ? ராமாயண சகோதரர்கள் நால்வருக்கும் மிதிலையில் இத்திருநாளில் தான் திருமணம் நடைபெற்றது. ராமன் -சீதா, பரதன்-மாண்டவி, லக்ஷ்மணன் -ஊர்மிளா, சத்ருகன்-சுருதகீர்த்தி என நான்கு இதிகாச ஜோடிகளும் திருமணத்தில் சேர்ந்தது பங்குனி உத்திரத்தில்தான்.

ஐயப்பன் பந்தள ராஜாவிற்கு மகனாக பிறந்ததும், பாண்டவர்களில் அர்ச்சுனன் தோன்றியதும், முருகப்பெருமானை தேடிச்சென்று மணந்த வள்ளி அவதாரமும் பங்குனி உத்திரமே.

பங்குனி உத்திர விரதத்தை சிறப்பாக கடைபிடித்தே மஹாவிஷ்ணுவின் மார்பில் ஸ்ரீமஹாலட்சுமி இடம்பிடித்தாள் என்று புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிவபெருமானுக்கு முருகன் பிரணவ உபதேசம் உரைத்து அப்பனுக்கே பாடம் சொன்ன சுப்பையாவாக ஆனதும், நெற்றிக்கண் நெருப்பில் மாண்டுபோன மன்மதனை சிவபெருமான் மீண்டும் எழுப்பித்தந்ததும், பங்குனி உத்திரத்தில் நிகழ்ந்ததுதான்.

ஸ்ரீபிரம்மாவே கொண்டாடிய முதல் உற்சவம் பங்குனி உத்திரத்திருவிழா என்கிறது தலபுராணம். ஸ்ரீ ராமானுஜர் பெருமாளின் திருவடியை அடைய தேர்வு செய்ததும் இந்தப்புண்ணிய நாளைத்தான். காரைக்கால் அம்மையார் முக்தி அடைந்ததும் பங்குனி உத்திரத்தில் தான்.

தமிழில் 12 வது மாதமான பங்குனியும், 12 வது நட்சத்திரமான உத்திரமும் இணையும் புனித நாள் தான் பங்குனி உத்திரம். சந்திரன் 27 நட்சத்திர கன்னியர்களை மனைவிகளாக ஏற்றுக்கொண்ட தினமும் பங்குனி உத்திர திருநாள் தான்.

பழனியில் காவடி உற்சவம், மயிலாப்பூரில் அறுபத்துமூவர் உற்சவம், சுவாமி மலையிலும் ,திருச்செந்தூரிலும் வள்ளி கல்யாணம், திருப்பரங்குன்றத்தில் தெய்வானை கல்யாணம், காஞ்சிபுரத்தில் கல்யாண உற்சவம், மதுரையில் மீனாட்சி திருமணம் என பங்குனி உத்திர நாளில் விழாக்களின் சங்கமம் மிக மிக அதிகம்.

சைவ வழிபாடுகளிலும், வைணவ வழிபாடுகளிலும் பங்குனிஉத்திரம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த இரு சமய வழிபாடுகளிலும் பங்குனி உத்திரம் போல வேறு எந்த மாதத்திலும் இவ்வளவு சிறப்பான விழா வருவது இல்லை.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் நடக்கும் விழாக்களில் மிக முக்கியமான பெருவிழா பங்குனி உத்திர திருவிழாதான். பெருமாளுக்கும், தாயாருக்கும் ஊடல் நிகழ்ந்து, பிறகு இருவரும் இணைந்தது பங்குனி உத்திர நன்னாளில் தான். எனவே, பெருமாளும், தாயாரும் அருகருகே கல்யாண கோலமாக எழுந்தருளி சேர்த்தி சேவை சாதிப்பர். இது ஆலய 5-வது திருச்சுற்றில், பங்குனி உத்திர மண்டபத்தில் நடக்கும்.

பங்குனி உத்திரப் பெருவிழா தினத்தன்று காலையில் நடைபெறும் இந்த வைபவத்தை கண் குளிர தரிசித்தால் ,திருமணப் பேறு உண்டாகும், பிரிந்த தம்பதி ஒன்று சேர்வர் என்பது ஐதீகம். இணைந்து வாழ்ந்து வருகிற தம்பதிகள் மேலும் ஒருவரையொருவர் நன்கு புரிந்துகொண்டு கருத்து ஒற்றுமையுடன் வாழ்வார்கள் என்பது நம்பிக்கை .

பங்குனி உத்திரத்தன்று கன்னிப்பெண்கள் கல்யாண விரதமிருந்து அருகில் உள்ள ஆலயங்களில் திருமணக்கோல தெய்வங்களை தரிசித்தால் அவர்களுக்கு கல்யாண வைபோகந்தான். அது போல திருமழபாடியில் நந்திக்கல்யாணம் கண்டால் முந்திக்கல்யாணம்தான்.

பங்குனி மாதத்தில் ஏற்றிய தீபத்தில் சிவனும் பார்வதியும் ஐக்கிய சொரூபமாகக் காட்சி தருகின்றனர். அதனால் அன்று திருவிளக்கு பூஜை செய்து பாவங்களை விலக்கி, பகை அகற்றி புண்ணியம் பெறலாம்.

பங்குனி உத்திரம் அன்று நீங்கள் எந்த தெய்வத்தை வழிபட்டாலும் சரி, எந்த ஆலய விழாவில் கலந்து கொண்டாலும் சரி மறக்காமல் குலதெய்வ வழிபாட்டை செய்ய வேண்டும். குலதெய்வ வழிபாடு மிக முக்கியமான ஒரு வழிபாடாகும்.
Tags:    

Similar News