செய்திகள்
நகைச்சுவை கலைஞர் குணால் காம்ரா

சுப்ரீம் கோர்ட்டுக்கு எதிராக நகைச்சுவை கலைஞரின் அவதூறு: டுவிட்டர் நிறுவனத்திடம் பாராளுமன்றக்குழு விசாரணை

Published On 2020-11-20 01:32 GMT   |   Update On 2020-11-20 01:32 GMT
சுப்ரீம் கோர்ட்டு மற்றும் தலைமை நீதிபதிக்கு எதிராக அவதூறு கருத்துகளை வெளியிட அனுமதித்தது ஏன்? என டுவிட்டர் நிறுவனத்திடம் பாராளுமன்றக்குழு உறுப்பினர்கள் விசாரணை நடத்தினர்.
புதுடெல்லி:

அர்ணாப் கோஸ்வாமிக்கு இடைக்கால ஜாமீன் வழங்கிய விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு மற்றும் தலைமை நீதிபதிக்கு எதிராக பிரபல நகைச்சுவை கலைஞர் குணால் காம்ரா, டுவிட்டர் தளத்தில் அவதூறு கருத்து வெளியிட்டு இருந்தார். இதற்காக அவருக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன.

இந்த நிலையில் தகவல் பாதுகாப்பு மசோதா தொடர்பாக விளக்கம் அளிப்பதற்காக டுவிட்டர் நிறுவன பிரதிநிதிகள் நேற்று பாராளுமன்றக்குழு முன் ஆஜராகி இருந்தனர். அப்போது அவர்களிடம் சுப்ரீம் கோர்ட்டு மற்றும் தலைமை நீதிபதிக்கு எதிராக இத்தகைய அவதூறு கருத்துகளை வெளியிட அனுமதித்தது ஏன்? என பாராளுமன்றக்குழு உறுப்பினர்கள் விசாரணை நடத்தினர்.

பின்னர் இந்த விவகாரம் தொடர்பாக 7 நாட்களுக்குள் பதிலளிக்குமாறு டுவிட்டர் நிறுவனத்துக்கு, பாராளுமன்றக்குழு உத்தரவிட்டது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாராளுமன்றக்குழு தலைவர் மீனாட்சி லெகி, சுப்ரீம் கோர்ட்டு மற்றும் தலைமை நீதிபதிக்கு எதிராக அவதூறு கருத்துகளை வெளியிட டுவிட்டர் நிறுவனம் தனது தளத்தை அனுமதித்து இருப்பது அவமானத்துக்குரியது என்று தெரிவித்தார்.

லடாக்கை சீனாவுடன் இணைத்து வரைபடம் வெளியிட்டதற்காக டுவிட்டர் நிறுவனம் இந்தியாவிடம் மன்னிப்பு கேட்டிருந்த நிலையில், நகைச்சுவை கலைஞர் விவகாரத்தில் மீண்டும் அது விசாரணைக்கு உள்ளாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News