செய்திகள்
திருவையாறு அருகே மோட்டார்சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் பலி
திருவையாறு அருகே மோட்டார்சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவையாறு:
திருவையாறை அடுத்த மேலத்திருப்பூந்துருத்தி வடக்குத்தெருவை சேர்ந்தவர் ராஜசேகர். இவரது மகன் சஞ்சீவிகுரு (வயது21). இவர் நேற்று தனது மோட்டார் சைக்கிளில் வீட்டில் இருந்து புறப்பட்டு தஞ்சைக்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது அம்மன்பேட்டை கடைவீதி திருப்பத்தில் திரும்பும் போது எதிரே திருவையாறு நோக்கி வந்த கார் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சஞ்சீவிகுரு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
தகவல் அறிந்த நடுக்காவேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ், சப்-இன்ஸ்பெக்டர் ஜோஸ்பின்சிசாரா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சஞ்சீவிகுரு உடலை கைப்பற்றி திருவையாறு அரசு மருத்துவமனைக்கு பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து நடுக்காவேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.