லைஃப்ஸ்டைல்
பால், காபியில் மாத்திரை போடலாமா?

பால், காபியில் மாத்திரை போடலாமா?

Published On 2020-05-30 09:27 GMT   |   Update On 2020-05-30 09:27 GMT
சிலர் காபி, டீ, பால், குளிர்ந்த நீர் என்று எது கிடைத்தாலும் அதில் மாத்திரை போட்டு கொள்வார்கள். ஆனால் இவை எல்லாமே தவறான முறையே.
சாதாரண காய்ச்சல் முதல் தீரா நோய்க்கு எடுத்துகொள்ளும் ஆயுள் கால மாத்திரைகள் வரை ஒவ்வொன்றும் ஒவ்வொரு குணங்களை கொண்டிருக்கிறது. இதை தவிர ஊட்டச்சத்துக்கள் குறைபாட்டிற்காகவும் மாத்திரைகள் எடுத்துகொள்வதுமுண்டு. மாத்திரைகளில் இருக்கும் மருந்தின் வீரியம் பொறுத்து அவை செயல்படுகின்றன. உணவுக்கு முன்பும், உணவுக்கு பின்பும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மாத்திரைகள் அந்த தருணத்தில் மட்டுமே எடுத்துகொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. சரியான நேரத்தில் சரியான அளவு எடுத்துகொண்டால் அவை உடலை பாதுகாப்பாக வைத்திருக்கும். இல்லையெனில் உடலை பதம்பார்த்துவிடும். அப்படி மாத்திரை எடுத்துகொள்ளும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து தெரிந்துகொள்வோம்.

மாத்திரைகளை வாயில் போட்டு தண்ணீர் குடித்து விழுங்குபவர்கள் உண்டு. இன்னும் சிலர் சிறிதளவு தண்ணீர் ஊற்றிகொண்டு மாத்திரைகளை போடுவார்கள். சிலர் எதையும் போடாமல் வெறும் மாத்திரையை வாயில் இட்டு கசப்பு இருந்தாலும் சப்பி கரைத்து விழுங்குவார்கள்.

இன்னும் சிலர் காபி, டீ, பால், குளிர்ந்த நீர் என்று எது கிடைத்தாலும் அதில் மாத்திரை போட்டு கொள்வார்கள். ஆனால் இவை எல்லாமே தவறான முறையே. மாத்திரைகளை உட்கொள்ளும் போது முறையாக உடலுக்குள் சென்றாலே ஆரோக்கியம் சீராகும். மாத்திரை நண்பனாக செயல்படும்.

தினமும் இரவில் ஒரு டம்ளர் பால் குடித்தால் நல்லது என்று மருத்துவர் அறிவுறுத்துவது உண்டு. ஆனால் பால் வாடை விரும்பாதவர்கள், மாத்திரைக்கு தனியாக தண்ணீர் குடிக்க வேண்டுமே என்று நினைப்பவர்கள் பாலுடன் மாத்திரைகள் எடுத்துகொள்ளும் போது பாலில் இருக்கும் புரதமும், கால்சியமும் மாத்திரையில் இருக்கும் மருந்தின் வீரியத்தை குறைத்து வேலை செய்யவிடாமல் தடுக்ககூடும்.

இதனால் மருந்தில் இருக்கும் சத்துகளை உடல் உறிஞ்சுக்க்ள்ள முடியாமல் உடல் கழிவோடு மருந்தையும் வெளியேற்றும். குறிப்பாக ஆன் டி பயாடிக் மாத்திரைகள் மருந்து செயல்படவிடாமல் தடுக்க கூடியவை. மூட்டு வலிக்கென பிரத்யேகமான ஊட்டச்சத்து பவுடர்களை மருத்துவர்களே பாலில் கலந்து குடிக்க வேண்டுமெனெ அறிவுறுத்துவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைவலி மாத்திரையை கூட காபியோடு எடுத்துகொள்ளும் வழக்கம் பலருக்கும் உண்டு. இது மிக தவறான முறை. காபியில் இருக்கும் காஃபின் மாத்திரைகளுடன் வினைபுரிந்து மாத்திரையில் இருக்கும் சத்துக்களை உடலுக்குள் சேராமல் தடுத்துவிடும். காபியில் மாத்திரை போடாவிட்டால் என்ன, மாத்திரைக்கு பிறகு காபி குடித்தால் போதும் என்பவர்கள், அதையும் தவிர்க்க வேண்டும்.

மாத்திரைகளை எடுத்துகொள்வதற்கு முன்பும் மாத்திரைகள் எடுத்துகொண்ட பின்பும் குறைந்தது ஒரு மணி நேரமாவது இடைவெளி இருக்க வேண்டும். குறிப்பாக ஆஸ்துமா, நுரையீரல், மூச்சுக்குழாய் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு மாத்திரை எடுத்துகொள்பவர்கள் மாத்திரைக்கு பதிலாக நச்சுக்களையே பெறுகிறார்கள்.

ஐஸ் வாட்டரில் மாத்திரைகள் எடுத்துகொள்ளும் போது மருந்து செயல்படுவதற்கு அதிக நேரம் பிடிக்கும். பொதுவாக உணவுக்கு பிறகு ஐஸ்வாட்டர் குடிக்கும் போது உணவில் இருக்கும் கொழுப்புகள் கரையாமல் தேங்கிவிடும். உணவு செரிமானம் ஆக குடலில் வெப்பம் இருக்க வேண்டும். அந்த வெப்பத்தை குளிர்ந்த நீர் இல்லாமல் செய்துவிடுவதால் உணவு செரிமானம் நேரமாகிறது. அதே போன்று ஐஸ்வாட்டரில் மாத்திரை போடும் போதும் மாத்திரையின் வேலையை தாமதமாக்கும்.

மாத்திரைகளை உட்கொள்ளும் போது எந்த மாத்திரையாக இருந்தாலும் நீங்கள் வாய் நிறைய தண்ணீரை நிரப்பி அதில் மாத்திரையை போட்டு விழுங்குவதுதான் சரியான முறை ஆகும். அப்படி செய்யும் போது மாத்திரை எங்கும் தடையில்லாமல் உணவுக்குழாயில் செல்லும். மாத்திரையை விழுங்கிய பிறகும் மீண்டும் 250 மில்லி அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.

குளிர்ந்த நீரில் எடுக்கும் போது மாத்திரை செயல்படும் நேரம் தாமதமாகும். இயன்றவரை வெதுவெதுப்பானநீரில் மாத்திரை எடுத்துகொள்வது சரியானது. குழந்தைகளுக்கு கொடுக்கும் போது மாத்திரையை பொடித்து வெதுவெதுப்பான நீரில் கலந்து அல்லது தேனில் குழைத்து கொடுக்கலாம். 
Tags:    

Similar News