செய்திகள்
வழக்கு பதிவு

ஈரோட்டில் கடந்த ஒரு வாரத்தில் ஊரடங்கை மீறியதாக 17,747 வழக்குகள் பதிவு

Published On 2021-05-18 05:36 GMT   |   Update On 2021-05-18 05:36 GMT
ஈரோடு மாவட்டம் முழுவதும் 8 டி.எஸ்.பி.க்கள் மேற்பார்வையில் 13 நிலையான சோதனைச் சாவடிகள், 42 கூடுதல் சோதனை சாவடிகளில் 700-க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தாக்கம் மீண்டும் வேகம் எடுத்துள்ளது. தினசரி பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் முழு ஊரடங்கில் தேவை இல்லாமல் வெளியே சுற்றுபவர்களை கண்காணிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை உத்தரவின் பெயரில் ஈரோடு மாவட்டம் முழுவதும் 8 டி.எஸ்.பி.க்கள் மேற்பார்வையில் 13 நிலையான சோதனைச் சாவடிகள், 42 கூடுதல் சோதனை சாவடிகளில் 700-க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது தவிர மாவட்டம் முழுவதும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தடுப்புகள் அமைத்தும் தேவை இல்லாமல் வெளியே சுற்றுப்பவர்களை பிடித்து வழக்கு பதிவு செய்தும் வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் கடந்த 10-ந் தேதி முதல் நேற்று வரை அதாவது கடந்த ஒரு வாரத்தில் மட்டும் முககவசம் அணியாமல் சென்றதாக 2,916 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.5.83 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

இதேபோல் சமூக இடை வெளியை பின்பற்றாததால் 266 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு ரூ.1.33 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கை மீறி இரண்டு, நான்கு சக்கர வாகனங்களில் சுற்றியதாக 13 ஆயிரத்து 198 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 976 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தேவையின்றி ஊர் சுற்றுவதாக 1,367 பேர் மீது வழக்கு பதிவு செய்து ரூ.6.83 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஊரடங்கை மீறியதாக 17,747 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதன் மூலம் ரூ.14 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டதாக ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கத்துரை தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News