செய்திகள்
பல்லடம் அருகே டெய்லர் வீட்டில் திருடிய வாலிபர் - பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்
வீடு திரும்பிய போது வீட்டின் கதவு திறந்திருந்தது. அவர்கள் வரும் சத்தம் கேட்டு உள்ளே இருந்து ஒரு வாலிபர் வெளியே வந்தார்.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் ஒன்றியம் பெருந்தொழுவில் டெய்லர் கடை நடத்தி வருபவர் மணி (வயது 55). இவரது மனைவி ராணி. நேற்று மாலை வேலைக்கு சென்ற ராணியை அழைத்து வருவதற்காக வீட்டைப் பூட்டிவிட்டு மணி சென்றார்.
பின்னர் வீடு திரும்பிய போது வீட்டின் கதவு திறந்திருந்தது. அவர்கள் வரும் சத்தம் கேட்டு உள்ளே இருந்து ஒரு வாலிபர் வெளியே வந்தார்.
உடனே கணவன் மனைவி இருவரும் திருடன் திருடன் என சத்தம் போட்டனர். உடனே அங்கிருந்த பொதுமக்கள் தப்பி ஓடிய வாலிபரை பிடித்து அங்கிருந்த மின்கம்பத்தில் கட்டி வைத்தனர்.
இதுகுறித்து அவிநாசிபாளையம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரை விசாரணை செய்தபோது, திருப்பூரை சேர்ந்த இஸ்மாயில் (32) என்பதும், மணி வெளியே சென்றவுடன் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று ஒரு பவுன் கம்மல், ரூ. 3 ஆயிரம் பணத்தை திருடிக்கொண்டு தப்ப முயற்சி செய்தது தெரியவந்தது.
இதையடுத்து அவரை கைது செய்து பணம் மற்றும் நகையை போலீசார் பறிமுதல் செய்தனர்.