செய்திகள்
கொரோனா தடுப்பூசி

வேலூர் மாவட்டத்தில் வருகிற 10-ந்தேதி 1000 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்

Published On 2021-10-08 11:06 GMT   |   Update On 2021-10-08 11:06 GMT
வேலூர் மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டாலும் அதிகளவில் உடல்நிலை பாதிப்பு ஏற்படுவதில்லை.

வேலூர்:

வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;

வேலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை 4 சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடந்துள்ளன. இதில் பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் 12 லட்சத்து 50 ஆயிரம் பேர் உள்ளனர்.

இதுவரை வேலூர் மாவட்டத்தில் 6 லட்சத்து 80 ஆயிரம் பேர் முதல் டோஸ் செலுத்தியுள்ளனர். 2 லட்சத்து 60ஆயிரம் பேர் 2-வது டோஸ் செலுத்தியுள்ளனர்.

வருகிற ஞாயிற்றுக்கிழமை மாவட்டம் முழுவதும் 1000 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடக்கிறது. வேலூர் மாநகராட்சி பகுதியில் 300 இடங்களில் நடக்கிறது. இதில் 60 ஆயிரம் முதல் 70 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். தடுப்பூசி செலுத்துவதால் பாதிப்பு எதுவும் இல்லை. தடுப்பூசி செலுத்தாதவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் வீடு வீடாகச் சென்று அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு தடுப்பூசி செலுத்தப்படும்.

தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டாலும் அதிகளவில் உடல்நிலை பாதிப்பு ஏற்படுவதில்லை. தடுப்பூசி போடாதவர்களுக்கு கொரோனோ பாதிப்பு ஏற்பட்டால் அதிக பாதிப்பு ஏற்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News