செய்திகள்
கொலை

நாங்குநேரி அருகே கிணற்றில் தள்ளி தொழிலாளி கொலை

Published On 2021-07-28 04:27 GMT   |   Update On 2021-07-28 04:27 GMT
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே கிணற்றில் தள்ளி தொழிலாளி கொலை செய்யப்பட்டது தொடர்பாக உறவினரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
களக்காடு:

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள முனைஞ்சிப்பட்டி சந்தை தெருவைச் சேர்ந்தவர் ராமர் (வயது 36). கட்டிட தொழிலாளி.

அதே பகுதியை சேர்ந்த அவரது உறவினர் சுடலை (வயது 41). இரண்டு பேரும் ஒன்றாகவே கட்டிட வேலைக்கு செல்வார்கள். மேலும் அவர்கள் ஒன்றாக மது குடிப்பதும் வழக்கம்.

நேற்று இரவு இவர்கள் அந்த பகுதியில் உள்ள பேச்சியம்மன் கோவில் அருகே உள்ள கிணற்று திண்டில் அமர்ந்து மதுகுடித்தனர். பின்னர் அங்கு நின்ற மற்ற நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது ராமருக்கும், சுடலைக்கும் திடீரென்று வாக்குவாதம் ஏற்பட்டது.

உடனடியாக அவர்களது நண்பர்கள் சமரசம் செய்தனர். ஆனாலும் ஆத்திரம் தீராத சுடலை, ராமரை திடீரென்று கிணற்றில் தள்ளிவிட்டார். அவரது தலை கிணற்று சுவரில் மோதி தண்ணீருக்குள் விழுந்தார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் ஓடி வந்து பார்த்தனர். ஆனால் ராமர் கிணற்று தண்ணீரில் மூழ்கிவிட்டார். உடனடியாக அவர்கள் மூலக்கரைபட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். நாங்குநேரி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து கிணற்றில் விழுந்த ராமர் உடலை மீட்க போராடினார்கள். சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக பேராடி இன்று அதிகாலை 2 மணியளவில் கயிறு கட்டி ராமர் உடலை மீட்டனர். அவரது தலையில் பலத்த ரத்தகாயம் இருந்தது. பிரேத பரிசோதனைக்காக அவரது உடல் நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பப் பட்டது.

இதுதொடர்பாக ராமரின் மனைவி தங்கம்மாள் (34), போலீசில் சுடலை மீது புகார் செய்தார். உடனடியாக போலீசார் சுடலையை பிடித்து விசாரணை நடத்தினர். அவரை தனிஇடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News